"பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!
எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பூமணியின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கரிசல் மண்ணின் மக்களின் வாழ்க்கை, வட்டார மொழி, சமூக அமைப்பு மற்றும் கிராமிய பண்பாட்டை எளிய நடையில் ஆழமாக பதிவு செய்த படைப்பாளராக பூமணி விளங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழின் அகராதிகளில் கூட இடம்பெறாத பல வட்டார வழக்குச் சொற்களை தனது படைப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் பூமணி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த 'அஞ்ஞாடி' நாவல், தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்ற படைப்பாகும் என்றும், அந்த தலைப்பே கரிசல் மண்ணின் மொழி வளத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், எழுத்தாளராக மட்டுமல்லாமல், 'கருவேலம்பூக்கள்' திரைப்படத்தை எழுதி இயக்கி தமிழ்நாடு அரசின் விருதையும் பூமணி பெற்றிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
இதையும் படிங்க: பூமணி மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு! கரிசல் இலக்கிய முன்னோடி!! கனிமொழி இரங்கல்!
பூமணியின் 'வெக்கை' நாவல் திரைப்படமாக 'அசுரன்' என்ற பெயரில் வெளியான பிறகு, இளம் தலைமுறையினரும் அவரது எழுத்துகளை அதிக அளவில் வாசிக்கத் தொடங்கியதாகவும் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது படைப்புகள் பல தலைமுறைகளுக்கும் சிந்தனையைத் தூண்டும் இலக்கியச் சொத்துகளாக தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில், 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பூமணிக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கிய தருணத்தையும் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார். அந்த நிகழ்வு தனது மனதில் என்றும் நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயல்பான மொழியில் வலிமையான படைப்புகளை உருவாக்கி தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த பூமணியின் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும் என்றும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING கரிசல் எழுத்தாளருக்காக கலங்கிய சி.எம்.... வேதனையுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்...!