×
 

ஸ்டாலினிடம் வீடு தேடிப்போய் ‘சாரி’ கேட்ட விஜய்... விடிந்ததுமே வீடியோ வெளியிட்டு தரமான பதிலடி...!

குறிப்பாக தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் போராடுபவர்களுக்கு, நிறைய பேருக்கு இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்திருக்கின்றன.

தனது மிசா கால அனுபவங்கள் குறித்தும், சட்டமன்றத்தில் சி.எம்.விஜய் செய்த சைகைக்கு பதிலடி தரும் வகையிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைபெற்ற சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம்முடைய உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும் இந்தச் சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய சிறை வரலாறு இடம்பெற்றிருப்பதால், அதைப் பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தம்பி விஜய், நீங்கள் சொன்னது உண்மைதான்; அதில் பொய் ஏதும் இல்லை. எமர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்து தலைவர் கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி, மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அப்போதைய ஒன்றிய அரசு 1976-ஆம் ஆண்டு திமுக ஆட்சியைக் கலைத்தது. ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடியே, மிசா சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டுக்கு போலீஸார் வந்தார்கள். அப்போது நான் வீட்டில் இல்லை. “பையன் பிரச்சாரத்துக்குப் போயிருக்கிறான். நாளைக்கு வந்துவிடுவான். வந்ததும் நானே போன் செய்கிறேன். வந்து கைது பண்ணிக்கங்க” என்று கலைஞர் சொல்லி போலீஸாரை அனுப்பிவிட்டார்.

அடுத்த நாள் நான் வந்ததும், அவரே போலீஸாரை வரச் சொல்லி என்னைக் கைது செய்யச் சொன்னார். சிறையில் எனக்குப் பல கொடுமைகள் நடந்தன. எங்களை அழைத்துச் சென்று அடைத்ததே தொழுநோயாளிகள் இருந்த இடத்தில்தான். பத்து பேரை ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைத்தார்கள். அந்த அறைக்குள்ளேயே ஒரு பானையில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த இடமே மிகவும் துர்நாற்றமாக இருக்கும். அங்கேதான் நாங்கள் தூங்க வேண்டும். இரவில் தூங்க விடாமல் போலீஸார் லத்தியால் அடிப்பார்கள்; பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதிகளை வைத்து எங்களைக் கொடூரமாக அடிக்கச் செய்தார்கள்.

அவர்கள் அடித்ததில் என்னுடன் இருந்த அருமை அண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு, சிறையிலேயே இறந்துபோனார். அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பெல்லாம் உடைந்துவிட்டது. நீங்கள் கூட இப்படிக் கை வைத்து தாடையைக் காட்டினீர்கள் அல்லவா? அது கரெக்ட்தான். இன்னைக்கும் நான் அடி வாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் போராடுபவர்களுக்கு, நிறைய பேருக்கு இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்திருக்கின்றன. போராளிகள் எல்லாம் இதைத் தாண்டித்தான் வந்திருப்பார்கள். எதிர்த்துப் போராடுவதும், அதற்கான விலைகளைச் சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. நீங்கள் கொள்கைத் தலைவராகச் சொல்கிற அறிஞர் அண்ணா காலத்திலிருந்து திமுகவின் வரலாறே இதுதான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையான ஒரு விஷயம்தான்.

யார் என்னைக் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்றவே முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும். சந்தேகம் என்றால், நீங்கள் சட்டமன்றத்தில் ஒரு லைப்ரரி இருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? அங்கே எல்லா ஆவணங்களும் இருக்கும். அங்கே போய் என்னுடைய போராட்ட வரலாற்றைப் படித்துப் பாருங்கள். உண்மை என்னவென்று புரியும்.

இரண்டாவதாக, சர்க்காரியா கமிஷன் பற்றியும் எங்கள் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவல்களைப் பேசியிருக்கிறீர்கள். ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதற்குப் பிறகு, ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பலமுறை ஆட்சி மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்திருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

இத்தனை ஆண்டுகளாக அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டை நீங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல், அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு, அதில் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட 95 சதவீத வழக்குகளில் இதுவரைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுகிறது என்பது இங்கே இருக்கிற எல்லாருக்குமே நன்றாகத் தெரியும்.

உங்களுக்கு தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீதும் அமலாக்கத்துறை பல வழக்குகளைப் போட்டிருக்கிறது. இதெல்லாம் ஒன்றிய அரசின் கொள்கைக்கு எதிரியாகச் செயல்படுகிற உங்களுக்கு எப்படி தெரியாமல் போச்சு?

மாண்புமிகு முதலமைச்சர் தம்பி விஜய், நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாடு சட்டமன்றத்துக்கென்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டைச் செதுக்கி உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் பொறுப்பு இப்போது உங்களுக்கும் இருக்கிறது.

சட்டமன்றத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வது, தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படி பாதுகாப்பது என்பதையெல்லாம் விவாதியுங்கள். அதுதான் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது. அதை விட்டுவிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.

நீங்கள் முதலமைச்சரானதும் என்னைச் சந்திக்க என் வீட்டுக்கு வந்தீர்கள். அப்போது நான் உங்கள் கரம் பிடித்து வரவேற்றேன். அப்போது நாம் பேசும்போது, “நீங்க என்கிட்ட தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை ரொம்ப விமர்சித்துப் பேசிட்டேன். ஐ ஆம் சாரி சார்” என்று சொன்னீர்கள். அதற்கு நான், “பரவாயில்லை பிரதர், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப் பற்றிப் பேசும்போதும் அந்தக் கண்ணியத்தோடு பேசுங்கள்” என்று சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல.

திரும்பவும் சொல்கிறேன். ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு உங்களுடைய வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம். அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வகிக்கிற பெரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சட்டசபையையே ரீல்ஸ் நடக்கும் இடமாக மாற்றுவது, நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று போட்டோஷூட் செய்வது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்துகிறீர்கள். உங்களுடைய திறனற்ற நிர்வாகத்தை மறைக்க இப்படி விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் ரியாலிட்டி என்ன? “உண்மை ஊரைச் சுற்றுவதற்குள் பொய் உலகத்தையே சுற்றி வந்துவிடும்” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா? அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்கள் ஆட்சியில் தினம் தினம் கொலை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்று சட்டம்-ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டு போயிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தீர்கள்; ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் என்று சொன்னீர்கள்; இப்போது தகுதியுள்ளவர்களுக்கு மூன்று சிலிண்டர்கள் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறீர்கள்.

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 என்று சொன்னீர்கள். இன்னும் நாங்கள் கொடுத்த அதே ரூ.1,000-தான் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி வாயைத் திறக்காமல் இருக்கிறீர்கள். அப்போது சொன்னதெல்லாம் ஒன்று; இப்போது செய்வதெல்லாம் ஒன்றாக இருக்கிறது.

மாற்றம் வேண்டும் என்று நினைத்து வாக்களித்த மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், உண்மையாகவே இப்போது என்ன மாற்றம் வந்திருக்கிறது என்பதை கவனியுங்கள். இது சரியான மாற்றமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எது நிர்வாகத் திறன் வாய்ந்த அரசு, எது திறமை இல்லாத அரசு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

குறிப்பாக கழக உடன்பிறப்புகளுக்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், மக்கள் நமக்கு முழுமையாக வாக்களிக்கவில்லை; நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதற்காக, இந்த ஆட்சியில் நடக்கிற தவறுகளால் மக்கள் பாதிக்கப்படும்போது, “நமக்கு என்ன?” என்று இருக்கக்கூடாது. அப்படி ஒரு எண்ணம் நம்முடைய சித்தாந்தத்திலேயே கிடையாது.

ஆட்சி கிடைக்காததை திமுக என்றைக்குமே தோல்வியாக நினைத்ததில்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, இதை மக்கள் பணியோடு இருக்கும் இன்னொரு முகமாகத்தான் நான் பார்க்கிறேன். ஆட்சியில் இருக்கிறோமோ, இல்லையோ, என்றைக்கும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் நாம் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

அவர்களுடைய தாத்தாவுக்காகச் சண்டை செய்தோம். அவர்களுடைய அப்பாவுக்காகச் சண்டை செய்தோம். இப்போது அவர்களுக்காகவே சண்டை செய்வோம். இதுதான் நம்முடைய திமுகவின் வரலாறு. அந்த வரலாறு எப்போதும் மாறாது; மாறவும் கூடாது. நன்றி. வணக்கம் எனக்கூறியுள்ளார். 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share