×
 

"கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்; மேகதாது போல் வாய்மூடி இருக்காமல் அரசு கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தியுள்ளார்.  

கர்நாடக வனத்துறையினர் அப்பாவித் தமிழர்கள் மூவரை அநியாயமாகச் சுட்டுக் கொன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், மேகதாது விவகாரத்தைப் போல இதிலும் வாய்மூடி மெளனம் காக்காமல் தமிழக அரசு தனது கடுமையான கண்டனத்தை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் மிக அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் கொடூரச் சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. மனித உயிர்கள் மீது எவ்வித மதிப்பும் மரியாதையும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று சாடியுள்ளார்.  

 

மேலும் அவர் தெரிவிக்கையில், "குற்றமிழைத்த வனத்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அத்தகைய மூடிமறைப்பு முயற்சிகளைத் தவிர்த்து, இச்சம்பவத்தை உடனடியாகக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். வெளிப்படைத்தன்மையும், பாரபட்சமற்ற தன்மையும் கொண்ட உயர்நிலை நீதி விசாரணை நடத்தப்பட்டு, இப்படுகொலைக்குக் காரணமான அனைத்து வனத்துறையினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது இத்தகைய வெறிச்செயல்களில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இதையும் படிங்க: 1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

தொடர்ந்து தமிழக அரசின் நிலைப்பாட்டை விமர்சித்துப் பேசிய அவர், "மேகதாது விவகாரத்தில் காட்டியது போன்று இதிலும் செயலற்று வாய்மூடி இருக்காமல், இக்கோரச் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசிடம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக உயிரிழந்த அப்பாவித் தமிழர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசிடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு அரசுப் பணி கிடைக்கச் செய்யவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

 

 

இதையும் படிங்க: கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share