×
 

நாகர்கோயில் சிறை கைதி மரண வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை...3 காவலர்கள் கைது...!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம். சிறை வார்டன் 3 பேர் கைது. கைதானவர்களை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை எஸ்பி செந்தாமரை கண்ணன் உத்தரவு.

 கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (வயது 33), கடை நடத்தி வந்தார். இவர் கடையில் குட்கா விற்றதாக தென்தாமரைகுளம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனை முடித்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சபரி வர்மன் நேற்று காலை சிறையிலேயே மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பும், அடைக்கப்பட்ட மறுநாளும் நலமுடன் இருந்த சபரி வர்மன் திடீரென எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது‌ உறவினர்கள் ஆஸ்பத்திரி முன் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் பிரேத பரிசோதனை முடிவில் தான் சபரி வர்மனின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறி சமாதானம் செய்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்ற நிலையில், அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று  மாலையில் வெளியானது. அப்போது சபரி வர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. கை, கால், மார்பு, தலை என அனைத்து இடங்களிலும் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தக்கட்டுகளும், விரலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளன.

இதைப் பார்க்கும்போது சபரி வர்மனை சிறையில் வைத்து கொடூரமாகத் தாக்கியிருப்பது உறுதியானது. இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி இருந்தார். அப்போது சபரி வர்மன் தாக்கப்பட்ட விவகாரம் ஓரளவுக்கு கசியத் தொடங்கியது. அப்போது முதன்மை சிறை வார்டன் திருமலை நம்பி, வார்டன்கள் ஜெகன், சிவகுமார் ஆகியோரை நேசமணிநகர் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இந்த நிலையில் தாக்கப்பட்டதால் தான் சபரி வர்மன் இறந்தது உறுதியானதை தொடர்ந்து முதன்மை வார்டன் உள்பட 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதே சமயம் சபரி வர்மன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதற்கு என்ன காரணம் என்று விவரம் தெரியவில்லை. எனவே‌ கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் சபரி வர்மன் இறந்தது தொடர்பாக சிறையில் இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர். நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 சிறை காவலர்களையும்  பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை எஸ்பி செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share