×
 

மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்... கதறிய பெற்றோர்..! நயினார் கண்டனம்..!!

மருத்துவர்கள் இல்லாததால் நான்கரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சம்பவம், தமிழ்நாட்டின் அரசு மருத்துவ சேவைகளில் உள்ள குறைகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.  நான்கரை வயதான சிறுவன் பிரஜன் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், அவனது பெற்றோர் அவசரமாக கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.ஆனால், அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணி நேரமாக இருந்தபோதிலும், மருத்துவர் யாரும் பணியில் இல்லை.

செவிலியர்களும் அல்லது மற்ற ஊழியர்களும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. முதல் உதவி கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், பெற்றோர் குழந்தையை மீண்டும் அழைத்துச் சென்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அங்கு சேரும்போதே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே, அலட்சிய திமுக ஆட்சியினால் பிஞ்சு உயிர் பலியாகி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் பலியாகியதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெக கூட்டணிக்கு வருமா? வராதா? நயினார் நாகேந்திரன் பளீச் பதில்..!!

"உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு" என்று ஐந்தாண்டுகளாக வெற்றுப் பெருமை பேசிவிட்டு, போதிய மருத்துவர்களைக்கூட திமுக அரசு நியமிக்கவே இல்லை என்பதன் சாட்சியே இக்கொடூர சம்பவம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆளும் அரசின் நிர்வாகத் திறனின்மையால் வாழ வேண்டிய அப்பாவிக் குழந்தையின் ஆயுள் பறிக்கப்படுவது இனி என்றும் நேரக் கூடாது எனவும் கூறியுள்ளார். மருத்துவத் துறையைச் சீரழித்து மக்கள் உயிரோடு விளையாடிய திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share