அவ்ளோ முட்டாள் இல்ல. ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!
மகளிர் உரிமை தொகை உயர்வு அறிவித்த முதல்வர் ஸ்டாலினை நைனார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மோசடி திமுகவின் வலையில் தமிழக மகளிர் சிக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மகளிருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது மாதம் ரூ.1,000 பெற்று வரும் பெண்களுக்கு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதாவது திராவிட மாடல் அரசு 2.0-இல் இந்தத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
2021-இல் ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து 2024 பாராளுமன்றத் தேர்தல் வரை 28 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றிய திமுக அரசு, வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, இப்பொழுது ரூ.5,000 பணத்தைக் கொடுத்து, தங்கள் அவல ஆட்சியின் சுவடுகளை மறைத்துவிடலாம் எனத் தப்புக்கணக்கு போடுவதாக தெரிவித்தார். ஆட்சி தொடங்கியதிலிருந்து பொங்கலும் கோடை காலமும் எத்தனையோ முறை வந்திருக்கிறது என்றும்., ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பொங்கலும், கோடை காலமும் திமுகவின் கண்களுக்குத் தெரியுமா எனவும் கேட்டுள்ளார். உண்மையில் பொங்கலுக்கான ரூ.3,000-மும், கோடைகாலத் தொகை ரூ.2,000-மும் மக்கள் நலனுக்காகக் கொடுக்கப்பட்ட தொகை அல்ல, தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கப்பட்ட அச்சாரத் தொகையே என்றார்.
இதையும் படிங்க: 12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!
2021-இல் இருந்து 2023 வரையிலான 28,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்காமல் ஏமாற்றிவிட்டு, 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கிய திமுக, ஒருவேளை, தப்பித்தவறி துரதிஷ்டவசமாக 2026 தேர்தலில் வென்றால், உடனே 2026-இல் மகளிர் உரிமைத் தொகையை வழங்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்டுள்ளார். சொல்லப் போனால், திமுகவின் திட்டமே, தற்போது ரூ.5,000 வழங்கி அதையும் இதையும் செய்து குட்டிக்கரணம் அடித்து சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்துவிட்டால், முன்பு செய்தது போல, 3 ஆண்டுகள் வரை உரிமைத் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு, 2029 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கியதும் மீண்டும் பணத்தைக் கொடுத்து, மக்களை ஏமாற்றலாம் என்பது தான் என்று கூறினார்.
இந்த மோசடி திட்டத்தை நம்புவதற்குத் தமிழக மகளிர் முட்டாள்கள் அல்ல என்றும் எடப்பாடி பழனிச்சாமி மகளிர் உரிமை தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்ததை ஈயடித்தான் காப்பி அடித்து சுய கண்டுபிடிப்பு போல பெருமை பேசும் திமுகவின் வழியில் மகளிர் சிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரவோடு இரவாக திமுகவுக்கு உதயமான ஐந்தாயிரம் ரூபாய் ஐடியா... முன்னாள் அமைச்சர் தங்கமணி சொன்ன முக்கிய காரணம்...!