ரூ.1000 கோடி கொட்டியும் இந்த நிலை! கழிப்பறையை கூட விட்டு வைக்காத திமுக ஊழல்.. சாடிய நயினார்..!
ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் மிக மோசமான நிலையில் தமிழகத்தில் கழிப்பறைகள் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
1000 கோடி ரூபாய் செலவிட்டும் கழிவறைகளின் நிலை மோசமாக இருப்பதாகவும், திமுகவின் உண்மை முகம் வெளிப்படுவதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கழிவறையை கூட திமுகவின் ஊழல் விட்டு வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 1,260 இடங்களில் உள்ள 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 620 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் ராயபுரம், திரு.வி.க ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளைத் தனியார்மயமாக்குவதற்கு ரூ. 430 கோடி செலவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானதாக கூறினார்.
திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக, ஜனவரி 2022-இல் ரூ. 3.18 ஆக இருந்த ஒரு பொது கழிப்பறையின் பராமரிப்பு செலவானது செப்டம்பர் 2022-இல் ரூ.363.9 ஆக உயர்த்தப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால், தற்போதுள்ள முக்கால்வாசி பொதுக் கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரையெல்லாம் கறைபடிந்து துர்நாற்றம் வீசுவதாகவும் இது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே, கடந்த 2023-இல் மகளிர் நலனுக்காக ரூ. 4.5 கோடி நிதி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட "she toilets" என்ற நடமாடும் மகளிர் கழிப்பறைகள் ஒரு வருடத்திற்குள் காணாமல் போய் விட்ட நிலையில், மீதமிருக்கும் கழிப்பறைகளும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பது மிகப்பெரும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இப்படி அலங்கோலமாகக் காட்சியளிக்கும் கழிப்பறைகளைப் பராமரிக்க ஆயிரம் கோடி செலவானது என அரசு கணக்கு காட்டுவது யார் காதில் பூ சுற்றுவதற்காக எனவும் இவர்கள் கொள்ளையடிக்கும் மக்கள் பணம் யாருக்கு செல்கிறது, எங்கே செல்கிறது எனவும் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.
ஊழல் முறைகேடுகளுக்குப் பெயர் போன திமுக, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் கழிப்பறையிலும் கொள்ளையடித்து கஜானாவை நிரப்பிக் கொள்ள துணிந்துள்ளது அருவருக்கத்தக்கது என்றும் இந்த ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே தமிழகம் புத்துணர்வு பெறும் எனவும் தெரிவித்தார்.