மின் கட்டண குளறுபடி.. பரிதவிக்கும் மக்கள்.. தமிழ்நாடு அரசுக்கு நயினார் வலியுறுத்தல்..!
மின்கட்டண கணக்கீடு குளறுபடிகளை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் கணக்கீடு செய்யும் பொழுது பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
மக்களுக்கு நேர்மையான மற்றும் துல்லியமான சேவைகளை வழங்க வேண்டிய தவெக அரசின் மின்சார வாரியம், தனது பொறுப்பில் இருந்து தவறியதன் காரணமாக, மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் குளறுபடிகளால் மக்களுக்குத் தவறான கட்டணங்களை அனுப்பி இருப்பதாக சுட்டி காட்டினார். இத்தகைய தவறான பில்லிங் முறைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர் எனவும் கூறினார்.
மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது தமிழக வெற்றிக் கழக அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்றார். எனவே கணக்கீட்டுப் பிழைகளால் மக்கள் மீது இமாலயக் கட்டணம் சுமத்தப்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில், முதலமைச்சர் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் கலையின் பெருமை..! முதல்வர் விஜய்க்கு கரகத்தை பரிசளித்த அமைச்சர் ராஜ்மோகன்..
மேலும், தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மின்வாரியம் உடனடியாகத் திருப்பித் தருவதோடு, மின்கட்டணக் குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணச் சிறப்புத் தணிக்கையை தவெக அரசு தொடங்க வேண்டும். மின்வாரியத்தின் இந்தப் பிரச்சினைகளை உடனடியாகச் சீரமைத்து மக்களின் சுமையைக் குறைக்கத் தவறினால், பாஜக சார்பில் ஒட்டுமொத்த மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!