#BREAKING: நீட் ரத்து..! வெளியேறிய பாஜக MLA..! பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!!
பாஜகவை தவிர பிற கட்சிகள் நீட் எதிர்ப்பு தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானத்தில் நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள், சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இத்தேர்வு கடுமையாக பாதித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீட் தேர்வு காரணமாக தனியார் பயிற்சி மையங்கள் பெருகிவிட்டன. அவை அதிகக் கட்டணம் வசூலித்து மாணவர்களை பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து விலக்கி, பயிற்சி மையங்களை மட்டுமே நோக்கித் திருப்பியுள்ளன. பன்னிரண்டு ஆண்டுகாலப் பள்ளிக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடத்தப்பட வேண்டிய இடத்தில், ஒரே நாள் தேர்வு மட்டுமே மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்துள்ளன எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.நீட் தேர்வில் தொடர்ந்து வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் ஏற்பட்டு வருவதும், அதனால் மாணவர்கள் நம்பிக்கையை இழந்து வருவதும், இளம் உயிர்கள் பறிபோவதும் கவலைக்குரிய விஷயங்களாக சுட்டிக்காட்டப்பட்டன. இதனால் தேர்வை முழுமையாக கைவிட்டு, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய மத்திய சட்டங்களில் திருத்தம் செய்து, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: "நீட் ரத்து"..! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்... ஆக்ஷனில் இறங்கிய விஜய் அரசு..!
இந்தத் தீர்மானத்திற்கு பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள், பாமக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு பேசினர். பாஜகவின் ஒரே உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினார். தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான நிலையை எடுத்து வருவதையும், இதற்கு முன்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்காததையும் அமைச்சர் நினைவுபடுத்தினார். மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான இந்தக் கோரிக்கை அரசியல் நோக்கமல்ல என்றும், மாநில உரிமைகளை மதிப்பதே கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார்.இதன் மூலம் தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஒருமுறை நீட் தேர்வை ரத்து செய்யும் கோரிக்கையை ஒருமனதாக வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!