×
 

இன்று நீட் மறுதேர்வு! நாடு முழுவதும் 5,500க்கும் மேற்பட்ட மையங்கள் தயார்!

நாடு முழுவதும் 551 நகரங்களில் 'நீட்' மறுதேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது. 551 நகரங்களில் உள்ள 5,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 22.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.

கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு தேர்வை ரத்து செய்தது. இதனால் 2026-27 கல்வியாண்டு மருத்துவ சேர்க்கைக்காக இந்த மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தேர்வு எழுதிய அதே மாணவர்களே இந்த முறையும் பங்கேற்கின்றனர். ஹால் டிக்கெட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வில் எந்த முறைகேட்டுக்கும் இடமில்லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் இன்னும் ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: டெலிகிராம் மீதான தடை! சரிதான்!! டெல்லி ஹைகோர்ட் திட்டவட்டம்! மத்திய அரசின் முடிவுக்கு க்ரீன் சிக்னல்!

தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 307 தேர்வு மையங்களில் 1,42,489 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் மட்டும் 43 மையங்களில் சுமார் 21,000 பேர் பங்கேற்கின்றனர். தேர்வர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு முன் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். அதற்குப் பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும்.

மாணவர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் (வெளிப்படையானது) மட்டும் எடுத்துச் செல்லலாம். செல்போன், ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதிக்கப்படாது. பேனா தேவையில்லை; தேர்வு அறையில் வழங்கப்படும். தேர்வு மையத்தில் அமைதியாக இருந்து, கண்காணிப்பாளரின் அறிவுறுத்தல்களை கவனமாகப் பின்பற்றுமாறு NTA அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறைகேடு இல்லாமல் தேர்வை நியாயமாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் வகையில் இந்த மறுதேர்வு சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீட் மறுத்தேர்வு வினாக்களும் கசிவு? சைபர் குற்றப் பிரிவு விசாரணை! மாணவர்கள் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share