×
 

நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!

காணொலி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நேபாள காவல்துறையினர், அதில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படும் உமேஷ் மற்றும் மதன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்து மண்ணில் புதைந்தவர்களின் சடலங்களைத் தேடுவது போல் சென்று, அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடியதாக கூறப்படும் கும்பல் தொடர்பான காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை நேபாள காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்துக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது. குறிப்பாக திபெத் எல்லையை ஒட்டிய ரசுவா மாவட்டத்தில் முதலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் திரிசூலி மற்றும் நாராயணி உள்ளிட்ட நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் நேபாளத்தின் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மோடியை சந்திக்க இந்தியா வருகை? நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்து முக்கிய தகவல்!

இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள ராணுவம் மற்றும் மீட்பு அமைப்புகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சகதி மற்றும் மண் குவியல்களில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், சடலங்களைத் தேடுவது போல் சென்று, உயிரிழந்தவர்களின் உடலில் இருந்த கம்மல் உள்ளிட்ட நகைகளை சிலர் திருடும் காட்சிகள் அடங்கிய காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது. பேரிடரில் உயிரிழந்தவர்களிடம்கூட இரக்கம் காட்டாமல் நகைகளை திருடும் காட்சிகள் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

காணொலி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நேபாள காவல்துறையினர், அதில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படும் உமேஷ் மற்றும் மதன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை சுமார் 500 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒருபுறம் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் சடலங்களில் இருந்த நகைகளை திருடியதாக கூறப்படும் சம்பவம் பேரிடரின் கொடூரமான மற்றொரு முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share