×
 

ரூ.1200 கோடியில் பிரம்மாண்டம்... சென்னையில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் இந்த 3 இடங்களில் எங்கு அமைய வாய்ப்பு?

புதிய தலைமைச் செயலகத்திற்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை அடங்கிய புதிய வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஓமந்தூரார் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கட்டியெழுப்பிய புதிய தலைமைச் செயலகம், 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசால் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: குழாய் அடி சண்டையில் விஜய் - ராகுல்... 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி போகும் தமிழக பொருளாதாரம்... ஆர்.பி.உதயகுமார் விளாசல்...!!

இந்நிலையில், சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய வளாகத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார். இதற்காக சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதி மற்றும் நந்தம்பாக்கத்தில் முன்பு இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் செயல்பட்ட இடம் ஆகிய மூன்று இடங்களே தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகைக்கு எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், அகலமான சர்தார் படேல் சாலையில் அமைந்துள்ளது. புதிய தலைமைச் செயலகத்திற்காக 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்த இடத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் இருந்தது.

இந்தப் பகுதியில்தான் 43 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். எனினும், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயிலும் அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நந்தம்பாக்கம் பகுதியில் அகலமான சாலைகள் இல்லை என்றாலும், சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் எளிதில் சென்றடையக்கூடிய இடமாக உள்ளது. மேலும், நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டினப்பாக்கத்தைப் பொறுத்தவரை, அங்கு அகலமான சாலைகள் இல்லை என்பதுடன், அடையாறு மற்றும் மயிலாப்பூர் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மூன்று இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்வு செய்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் குறித்து தமிழ்நாடு அரசு இம்மாதத்தின் மத்தியில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “அனைத்து நாட்களும்... 24 மணி நேரமும்...” - வணிகர்கள், தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட்நியூஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share