கூடலூரில் பந்த்... ஆட்கொல்லி புலிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு...! முடங்கிய நகரம்..!!
கூடலூரில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆட்கொல்லி புலி ஏற்படுத்தியுள்ள அச்சமும், அதன் விளைவாக எழுந்துள்ள மக்கள் போராட்டமும் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் 21 ஆம் தேதியும் இரண்டு தனித்தனி தாக்குதல்களில் இருவர் உயிரிழந்தனர். முதல் சம்பவத்தில் பாலகிருஷ்ணன் என்ற விவசாயி தண்ணீர் பாய்ச்ச சென்றபோது புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். உடல் பகுதிகள் தின்னப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது
. அதே பகுதியில் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் என்ற மற்றொரு விவசாயி காபி தோட்டப் பகுதியில் பணிபுரிந்தபோது புலி பாய்ந்து தாக்கி கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே புலியால் நிகழ்ந்ததாக வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். பாதச்சுவடுகளின் ஒற்றுமை மற்றும் தாக்குதல் முறை ஆகியவை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடப்படுகின்றன.இந்த தொடர் சம்பவங்கள் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே பெரும் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குச் செல்லும் மக்கள் இரவும் பகலும் அச்சத்துடன் வாழ்கின்றனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் வீட்டை விட்டு வெளியேறத் தயங்குகின்றனர். இரவு நேரங்களில் வீட்டுக்குள் இருந்தே அச்சம் நீடிக்கிறது. மக்கள் புலியை உடனடியாக சுட்டுப் பிடிக்க வேண்டும் அல்லது பிடித்து அகற்ற வேண்டும் என வனத்துறையிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆட்கொல்லி என அறிவிக்கப்பட்ட இந்த புலி தொடர்ந்து நடமாடி வருவதாகவும், மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் பரவியுள்ளது.வனத்துறை தரப்பில் புலியைப் பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இன்று ஆட்டோ, டாக்ஸி, ஜீப் எதுவுமே ஓடாது... ஊட்டியில் வெடித்தது மிகப்பெரிய போராட்டம் ... காரணம் என்ன?
பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ட்ரோன் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வெப்ப உணர்வு ட்ரோன்கள் மூலம் தேடல் பணி நடைபெறுகிறது. மழை, மூடுபனி மற்றும் மோசமான தெரிவுநிலை காரணமாக தேடல் பணி தடைபட்டு வருகிறது. புலி இன்னும் சிக்காமல் உள்ளது. இதனால் மக்களின் பொறுமை குறைந்துள்ளது. வனத்துறையின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இந்த நிலையில் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. நேற்று ஆகஸ்ட் 27 காலை 6 மணி முதல் தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் நாளை காலை 6 மணி வரை நடைபெறும்.
அனைத்துக் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள், ஓட்டுநர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் வாகனங்கள் இயங்கவில்லை. ஆட்டோக்கள், ஜீப்புகள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கூடலூர் பகுதி முடங்கிய நிலையில் உள்ளது. கேரளாவிலிருந்து ஊட்டி மற்றும் மைசூர் செல்லும் பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!