7.5% அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை! உயர்கல்வித் துறை எச்சரிக்கை!
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் இருந்து எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்றும், மாணவர்களின் விவரங்களைக் கொண்டு தவறான முறையில் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது கடுமையான விசாரணை நடத்தித் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2026 (TNEA 2026) கால அட்டவணையின்படி, அரசுப் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 13 முதல் ஜூலை 19 வரை நடைபெற்றது. இதில் 950 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட பொதுக் கலந்தாய்வில் விருப்பப் பாடப்பிரிவுகளைப் பதிவு செய்த 32,250 மாணவர்களில், தரவரிசை மற்றும் இடங்களின் அடிப்படையில் 28,550 மாணவர்களுக்குக் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டு ஆணைகள், 11 அரசு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 33 பேராசிரியர்களைக் கொண்டு நேரில் கொண்டு வரப்பட்டுத் துல்லியமாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே வெளியிடப்பட்டுள்ளன.
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் TFC மையங்களிலும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் தங்களுக்குச் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலும் ஜூலை 26 முதல் ஜூலை 30-ஆம் தேதிக்குள் அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் 423 கல்லூரி முதல்வர்கள் மற்றும் சேர்க்கை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரால் திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!
பொறியியல் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் tndote@tndote.com அல்லது tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளிலோ அல்லது 1800-425-0110 என்ற இலவசத் தொலைபேசி எண் வாயிலாகக் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள 110 சேர்க்கை உதவி மையங்களை (TFC) மாணவர்கள் அணுகலாம் என்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "E20 வேணாம், 100% பெட்ரோல் வேண்டும்!" நிதின் கட்கரிக்கு எதிராக உருவான 'E20 ஜனதா கட்சி'!