×
 

நீர்ப்பாசனத் திட்டம் எங்கே? வேளாண் பட்ஜெட்டை கடுமையாக சாடிய சௌமியா அன்புமணி!

வளமான தமிழ்நாட்டை நோக்கி பட்ஜெட் என முதல்வர் கூறுவது தவறானது என்றும் வேளாண் பட்ஜெட்டில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பென்னாகரம் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் மஞ்சள் அம்மாள் பெயர்களில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதற்குத் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்தார். இருப்பினும், விவசாயிகளின் பிரதானக் கோரிக்கைகள் எதுவும் இந்த அறிக்கையில் நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

தண்ணீர் வசதி இல்லாமல் எந்தவிதமான வேளாண் திட்டங்களையும் முழுமையாகச் செயல்படுத்த முடியாது. வளமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்றால் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டில் முதலிடம் அளித்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: காலி பாத்திரம் சத்தம் போடுவது போல் உள்ளது! பட்ஜெட்டை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

 விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கை இந்த பட்ஜெட்டிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 வரை கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, தற்போது பழைய கொள்முதல் விலையையே தொடர்வது விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் பாழாவதைத் தடுக்கத் தார்ப்பாய் தருவதாகக் கூறுவதை விட, நிலையான மேற்கூரைகள் அமைக்க நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த மாநில வரவு செலவுத் திட்டத்தில் 22-க்கும் மேற்பட்ட சார்புத் துறைகளை உள்ளடக்கிய வேளாண்மைத் துறைக்கு வெறும் 12 முதல் 13 சதவீதம் வரை மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

இலவச மின்சாரத்திற்காகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு முறையான அறிவிப்புகள் இல்லை என்றும், வறட்சி மற்றும் நீர்ப்பாசனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவது பயனளிக்காது என்றும் சௌமியா அன்புமணி தனது பேட்டியில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share