"பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பித் தேவையில்லாமல் எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த வதந்திகள் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைந்து எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்கும்: இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கான (Domestic LPG) தட்டுப்பாடு நீக்கப்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் அதன் காத்திருப்பு காலம் வெறும் 5 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் மிக விரைவில் சிலிண்டர்களைப் பெற முடியும். ஆட்டோக்களுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி எரிபொருளும் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!
"எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அல்லது விலை உயரும் என்ற தவறான தகவல்களை நம்பி, பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் ஒரே நேரத்தில் கூடுவதையோ அல்லது கேன்களில் எரிபொருளை வாங்கிச் சேமிப்பதையோ (Panic Buying) தவிர்க்க வேண்டும். இது விநியோகச் சங்கிலியில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும். அனைத்து எரிபொருட்களும் தடையின்றி கிடைப்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்," என வி.சி. அசோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், கடந்த சில நாட்களாக நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இயல்பு நிலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம்: 2026-27 கல்வியாண்டில் 1 லட்சத்தைக் கடந்த மாணவர் சேர்க்கை!