×
 

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை இயல்பானது: உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை இயல்பானது என்றும் உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை இயல்பானது: உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

ஊழல் புரிந்தோ அல்லது எவ்விதத் தவறுகளிலோ ஈடுபட்டிருந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டுள்ள அதிரடிச் சோதனை இயல்பான சட்ட நடைமுறை மட்டுமே என்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி மறைந்தவருமான பி.கே.மூக்கையாத்தேவரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் சி.நிர்மல்குமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய், தங்கப்பாண்டி, கல்லானை, ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 10 எம்எல்ஏ-க்கள் நேரில் பங்கேற்று அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்தும் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "மறைந்த பெருந்தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் நினைவு நாளில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தியுள்ளோம். மேகமலை வனப்பகுதி விவகாரத்தில் உண்மை நிலவரங்களை முந்தைய ஆட்சியாளர்கள் உரிய முறையில் வெளிப்படுத்தாமல் மூடி மறைத்துவிட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அக்கறை காட்டாமல் வழக்கை அலட்சியமாக நடத்தியுள்ளனர். தற்போது இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், அங்கு வாழும் மக்களின் உண்மை நிலையைத் தவெக அரசு நீதிமன்றத்தில் ஆணித்தரமாக எடுத்துரைக்கும்; நிச்சயம் அம்மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.

உள்ளூர் கட்டமைப்புப் பணிகள் குறித்துப் பேசிய அவர், "உசிலம்பட்டி நகராட்சிப் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் முடங்கிக் கிடப்பதற்கு திமுக நிர்வாகிகளின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே அடிப்படைக் காரணம்; அந்தத் தடைகளைத் தகர்த்துப் பணிகளைத் தற்போது விரைந்து சரி செய்து கொண்டிருக்கிறோம். அதேபோல் இப்பகுதி விவசாயிகளின் ஜீவாதாரக் கோரிக்கையான 58 கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கிடைத்திட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் அரசு முழு வீச்சில் எடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தச் சோதனை நடைபெறவில்லை; இது முற்றிலும் இயல்பான விசாரணை நடவடிக்கைதான். அரசுத் துறையில் எவர் மீதும் பொய்யான வழக்குகளைப் போட்டுவிட முடியாது. லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசுப் பணிகளில் ஆட்களை நியமித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கிடைத்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது; அந்த வழக்காகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஊழல் புரிந்திருந்தாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தாலோ அவர்கள் எந்தப் பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் சட்டத்திலிருந்து தப்பவே முடியாது" என்று எச்சரித்தார்.

தொடர்ந்து இடதுசாரிகளுடனான உறவு மற்றும் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்துப் பேசிய அமைச்சர், "ஒரு சில கள நிகழ்வுகள் குறித்துத் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வந்தாலும், அக்கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் நாங்கள் தொடர்ந்து இணக்கமாகப் பேசி வருகிறோம்; அவர்களோடு தோளோடு தோள் நின்று இணைந்து மக்கள் பணியாற்றுவோம். ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் இந்த அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ, மக்களுக்கு என்ன தேவையோ அதை மாண்புமிகு முதலமைச்சர் நாளை சட்டமன்றப் பேரவையில் விரிவாகப் பேசுவார்" என்று தெரிவித்தார்.

 

 

 

இதையும் படிங்க: குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share