அக்கா பொண்ணுக்கு சீட் கொடுத்தா வாரிசு அரசியலா? தகுதி இருக்குறவங்கள எப்பிடி மறுக்க முடியும்? திருமா சப்பைக்கட்டு!
''தேர்தலில் போட்டியிட அக்கா மகளுக்கு சீட் கொடுத்தது, வாரிசு அரசியல் கிடையாது. குடும்ப உறவினர் என்பதற்காக, தகுதி வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பு மறுக்க முடியாது,'' என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், தனது அக்கா மகளுக்கு சீட் கொடுத்தது வாரிசு அரசியல் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியதாவது: “எனக்கு 63 வயது ஆகிறது. இன்னும் 15 ஆண்டுகள் அரசியலில் தீவிரமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த பிறகு வட மாநிலங்களைச் சேர்ந்த தலித் தலைவர்கள் என்னுடன் பேசினர்.
‘தேசிய அளவில் தலித் அடையாளத்தை கொண்ட ஒரே சுயேச்சையான குரலை பாராளுமன்றம் இழக்க நேரிடும்’ என்று கவலை தெரிவித்தனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களும் அதே கருத்தைத் தெரிவித்தனர். எனவே, நான் போட்டியில் இருந்து விலகிக்கொண்டேன். இது ஒரு ராஜதந்திர செயல்பாடு, அரசியல் தவறு அல்ல” என்றார்.
இதையும் படிங்க: திமுகவை உடைக்க பார்க்கும் பாஜக! விலைபோகும் எம்.எல்.ஏ-க்கள்! திருமாவளவன் பற்ற வைத்த பரபரப்பு!
துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவிக்காகவே போட்டியிட நினைத்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை அவர் மறுத்தார். “இத்தகைய எதிர்மறை விமர்சனங்கள் என்னை பாதித்துவிட்டன. அது எங்கள் அணியை பாதிக்க நான் விரும்பவில்லை. எனது முடிவுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
தனது உறவினரான அக்கா மகள் மாலதியை சிதம்பரம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். “மாலதியின் கணவர் திருக்குமரன் நீண்ட காலமாக கட்சிப்பணியாற்றி வருபவர். குடும்ப உறவினர் என்பதற்காக, தகுதி வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பு மறுக்க முடியாது. இது வாரிசு அரசியல் கிடையாது” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், “சிதம்பரம் இடைத்தேர்தல் திணிக்கப்படும் என்பதைப் பற்றி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கவலை தெரிவித்தார். ஆனால், நான் போட்டியிடுவதாக அறிவித்தபோது அவர் மகிழ்ச்சியே தெரிவித்தார்” என்றும் திருமாவளவன் கூறினார்.
திருமாவளவனின் இந்த பேட்டி, தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவரின் முடிவு மற்றும் அவரது உறவினருக்கு சீட் கொடுத்தது குறித்த விளக்கம், கூட்டணி அரசியலில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: சமூக நீதி பற்றி பேசு திமுக வெட்கப்படணும்! மாணவர்கள் அவல நிலை! அண்ணாமலை விமர்சனம்!