×
 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு... வடமாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் கவனம்! சந்திக்க காத்திருக்கும் எம்.பி.,க்கள்?

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு, விஜய்க்கும் வட மாநிலங்களில் வரவேற்பு அதிகரித்து வருவதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி: பார்லிமென்டின் பல்வேறு நிலைக்குழுக்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுக்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள தேவைகள், கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து தகவல்களை சேகரிப்பது வழக்கம்.

கள ஆய்வின்போது பெறப்படும் தகவல்கள், பார்லிமென்ட் செயலக அதிகாரிகளின் உதவியுடன் தொகுக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்படுகின்றன. பின்னர் அந்த அறிக்கைகள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நிலைக்குழு தலைவர்களுக்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சில ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கு செல்லும்போது அந்தந்த மாநில முதல்வர்களை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி, தேவைகள் மற்றும் முக்கிய பிரச்னைகள் குறித்து நேரடியாக கலந்துரையாட வேண்டும் என அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெக போடும் ஸ்கெட்ச்... விடாப்பிடியாக அடித்த கம்யூனிஸ்ட்கள்...!

அப்போது தான் மாநிலத்தின் உண்மையான தேவைகளை விரிவாக அறிந்து கொள்ள முடியும் என்றும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து பார்லிமென்டில் உரிய முறையில் பேச முடியும் என்றும் அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்துக்கு செல்லும் நிலைக்குழு உறுப்பினர்கள், தமிழக முதல்வர் விஜயை சந்திக்க வேண்டும் என்றும் ஓம் பிர்லா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அரசியல் களத்தில் விஜய் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்திருப்பது தொடர்பாக அவரிடம் இருந்து பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, சில நிலைக்குழுக்களில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் விஜயை சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சில நிலைக்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே அவரை சந்தித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, விஜய் தொடர்பான காணொளிகள் வட மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு, விஜய்க்கும் வட மாநிலங்களில் வரவேற்பு அதிகரித்து வருவதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், “அடுத்த பிரதமர் விஜய்” என்ற முழக்கத்தையும் தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்வைத்து வருகின்றனர். எனினும், இது கட்சி ஆதரவாளர்களின் அரசியல் எதிர்பார்ப்பாகவே பார்க்கப்படுகிறது. விஜயின் தேசிய அரசியல் பயணம் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து காலம்தான் தெளிவான பதிலை அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பில்லை.. அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share