தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!
தைரியம் இருந்தால் அதை ஓப்பன் செய்யுங்கள் என முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தாமல் ஆளுங்கட்சியினர் பாட்டுப் பாடுவதைப் பார்த்தால் சட்டசபைக்குப் போகிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எழுவதாகவும், தம்மிடம் 3 ரகசியக் கோப்புகள் இருப்பதாகக் கூறி பூச்சாண்டி காட்டும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தைரியம் இருந்தால் அந்தப் பெட்டியை உடனடியாகத் திறந்து காட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் முக்கியத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'போராளி ஓய்வதில்லை' என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஆளும் தவெக அரசின் 105 நாள் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்கும் பேரியக்கம்; தேர்தல் நேரத்தில் உண்மையான எதிரி யார் என்பதைச் சரியாகக் கணிக்காமல் அரசியல் களத்தில் நின்ற தவறைத் தொண்டர்கள் இனி ஒருபோதும் செய்துவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், சினிமா கவர்ச்சி மற்றும் சமூக வலைதள மாயைகளால் அரசின் சாதனைகள் முழுமையாகச் சென்றடையாத சூழல் அமைந்தாலும், அடுத்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என சூளுரைத்தார்.
இதையும் படிங்க: தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் மனு: மிலானி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், முந்தைய திமுக அரசால் மக்கள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட முத்திரை பதித்த திட்டங்களின் பெயர்களை மாற்றுவதையே தங்களது முழுநேரச் சாதனையாக இந்த அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக எதிர்க்கட்சிகள் பேசுவதை விட ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் பேசுவதே அவைக் குறிப்பில் இருந்து தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகிறது.
கேள்வி நேரமே ஒழுங்காக நடத்த முடியாத நிர்வாகக் குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன எனக் குற்றம்சாட்டினார். மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல் 25 நாட்களுக்கு ஒருமுறை போஸ்டர் ஒட்டுவது போலப் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களைத் திசைதிருப்பும் நாடகங்களை ஆளுங்கட்சி அரங்கேற்றி வருவதாகவும், அவர்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்களே இதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சரின் மிரட்டல் பேச்சுகளுக்கு திமுக தொண்டர்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், என் மேசையில் 3 கோப்புகள் உள்ளன, திறக்க வைத்துவிடாதீர்கள் என முதல்வர் எச்சரிக்கிறார்; அந்த மிரட்டல் உருட்டல் வேலைகளையெல்லாம் திமுகவினரிடம் காட்ட வேண்டாம். மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பதில் சொல்லத் துப்பில்லாமல் அமைச்சர்களை முன்னிறுத்துகிறார்கள்; ஆனால் முதல்வர் உள்பட பலருக்கே அமைச்சர்களின் பெயர்கள் சரியாகத் தெரிவதில்லை என மிகக் காட்டமாக விமர்சித்தார். அரசு கஜானா காலியாக இருப்பதாகக் கூறிவிட்டு எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கத் துடிக்கும் இந்த அரசுக்குத் தமிழக மக்கள் வரும் காலங்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!