×
 

ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

உயர்நீதிமன்ற மதுரை கிளை பத்திரப்பதிவை ரத்து செய்ததுடன், ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான அரிய நிலம் தொடர்பான பலகோடி மதிப்புள்ள மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், உடல்நலக் குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கில் ஏற்கனவே ஏற்பட்ட பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்பிடப்படுகிறது. இந்த நிலம் 1888ஆம் ஆண்டிலேயே மடத்தின் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது என்றும், விற்பனை செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் இருந்தது என்றும் அறியப்படுகிறது. 

கடந்த ஜூலை 6ஆம் தேதி, வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் இருந்தபோது பொறுப்பில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன், போலி ஆவணங்களின் அடிப்படையில் இந்த நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு தனியார்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழக அரசின் உத்தரவின்படி ஜூலை 15ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதையும் படிங்க: பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

விசாரணையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்தின் சார்பில் செயல்பட்டதாகக் கூறப்படும் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை மற்றும் சேதுபதி, பத்திரம் தயாரித்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை பத்திரப்பதிவை ரத்து செய்ததுடன், ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.

தலைமறைவாக இருந்த ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கொடைக்கானலில் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் அவருக்கு மூச்சுத் திணறல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு உயர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீதிபதி பாக்கியராஜ் மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு ஆகஸ்ட் 21 வரை நீதிமன்ற காவல் உத்தரவிட்டார்.

தற்போது மேல் சிகிச்சைக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்த வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்த நிலையில், ஜஸ்டின் மணிகண்டனின் மருத்துவமனை மாற்றம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share