வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது
திருச்செந்தூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச படம் அனுப்பிப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக, மதபோதகர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி, பேயன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (34). இவர் தேரிகுடியிருப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் ஆறுமுகனேரி பூவரசூரில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் தனது குழந்தைக்கு ஞானஸ்நானம் பெறுவதற்காக, உறவினர் பெண் ஒருவரின் உதவியோடு சாத்தான்குளம் சி.எஸ்.ஐ தேவாலய மதபோதகரான டேவிட் ஞானையா என்பவருடன் சங்கீதாவிற்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திக் கொண்ட மதபோதகர் டேவிட் ஞானையா, ஆரம்பக் காலகட்டத்தில் இருந்தே சங்கீதாவிடம் ஆன்மீகத்திற்குப் புறம்பாக, முற்றிலும் தவறான நோக்கத்தில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மதபோதகர், உங்களது ஞானஸ்நானச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைத்துள்ளார். தொடர்ந்து கடந்த மே 13-ஆம் தேதி சங்கீதாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி நேரில் வருமாறு வலியுறுத்தியுள்ளார். அதற்குச் சங்கீதாவும் மாலை 4 மணிக்கு வருவதாகப் பதில் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், மதபோதகர் டேவிட் ஞானையா தனது மொபைல் போன் மூலமாகச் சங்கீதாவின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் பெண் ஒருவரின் ஆபாசப் புகைப் படத்தை அனுப்பி, பாலியல் ரீதியாக அநாகரிகமாகத் தொந்தரவு கொடுத்துள்ளார். மதபோதகரின் இந்த அநாகரிகச் செயலால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பெண் ஊழியர், உடனடியாகத் தனது மொபைல் ஆதாரங்களுடன் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் உத்தியோகப்பூர்வமாகப் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: “தயவு செஞ்சி என்னை விட்டுடுங்க...” - ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை... இதயத்தை நொறுக்கும் பெண்ணின் வாக்குமூலம்...!
அவர் அளித்த அந்தப் புகாரின் அடிப்படையில், ஆறுமுகனேரி காவல் நிலைய போலீசார் மதபோதகர் டேவிட் ஞானையா மீது பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!