ரூ.200 கோடியில் சிப்காட் தொழில் பூங்கா; ரூ.18 கோடியில் வணிக வளாகம்... திருப்பத்தூருக்கு அடித்த ஜாக்பாட்!!
திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு அம்மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேபோல் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தேவையான 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், காலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்டேன். அதனை கேட்டுவிட்டு அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியுமா? இதன் காரணமாகவே இந்த மாவட்டத்திற்கு 5 அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், பொதுமக்கள் மருத்துவ வசதிகளை பெறவும், வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யவும், ரூ.30 கோடி செலவில் 7 கிமீட்டருக்கு சாலை அமைக்கப்படும்.
இதையும் படிங்க: சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!
அதேபோல், 2வதாக, குமாரமங்கலம் பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அந்தப் பகுதியில் ரூ.6 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். 3வதாக, நல்லகுண்டா பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவையொட்டி 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
4வதாக திருப்பத்தூர் நகரத்தின் மையப் பகுதியில் பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும். கடைசியாக ஆம்பூர் நகர் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடி செலவில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எப்படியாவது கூட்டணியை உடச்சிடலாம்னு நினைக்கிறீங்க.. ஆனால்... நயினார் நாகேந்திரன் அதிரடி!!