×
 

விஜய் ஆப்செண்ட், ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!

பெரம்பூர் களத்தில் பெண் வேட்பாளராக கில்லி போல் சொல்லியடித்து பிரசாரம் செய்து வருகிறார் பாமக வேட்பாளர் ம.திலகபாமா.

தமிழக அரசியல் வரலாற்றில் சில தேர்தல்கள் சாதாரண போட்டிகளைத் தாண்டி, மாற்றத்தின் முன்னறிகுறிகளாக மாறும். அந்த வகையில், இந்த முறை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. “யார் வெல்வார்?” என்பதைக் காட்டிலும் “யார் மாற்றத்தை கொண்டு வருவார்?” என்ற கேள்வியே தொகுதியில் அதிகமாகப் பேசப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஆர்.டி.சேகரையும், முதல் முறையாக தேர்தலில் களம் காணும் தவெக தலைவர் விஜய்யையும் தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லை என மக்கள் தேடிக்கொண்டிருக்க, களத்தில் இறங்கி கில்லியாக களப்பணியாற்றி வருகிறார் பாமக வேட்பாளர் ம.திலகபாமா 


பொதுவாக தேர்தல் நேரங்களில் தான் பல வேட்பாளர்கள் மக்களைச் சந்திக்க வருவார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஆர்.டி.சேகரும், முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியையே அம்னீசியா வந்தது போல் மறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு இறுதிக்கட்ட பரப்புரைக்காக மட்டுமே இருவரும் தலைக்காட்டியுள்ள நிலையில், திலகபாமாவின் அணுகுமுறை அதைவிட வேறுபட்டதாக இருக்கிறது. சிவகாசியைச் சேர்ந்த திலகபாமா தனது சமூக மற்றும் கல்விச் சேவைகளால் ஏற்கனவே மக்களின் மனங்களில் இடம்பெற்றவர். பெரம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், ஆரம்பத்தில் “தொகுதிக்கு வெளியே இருந்து வந்தவர்” என்று சொல்லப்பட்டவர், இன்று “நம்ம வீட்டு பெண்” என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். வீடுகள் தோறும் சென்று மக்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டு அறியும் அவரது அணுகுமுறையும், மக்களின் மனநிலையை உடனடியாக புரிந்து கொண்டு அதற்கு தீர்வளிக்க முயற்சிக்கும் செயல்பாடுகளும் பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுத் தந்துள்ளது. 

இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!

அரசியலில் பெண்களின் பங்கு குறித்து பேசுவது ஒன்றாக இருந்தாலும், அதை நடைமுறையில் கொண்டு வரும் போது வேறொன்றாகி விடும். ஆனால் அதைத்தாண்டி, திலகபாமா தனது பரப்புரையின் போது பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு “அஞ்சறை பெட்டியிலிருந்து அரசியல் – மகளிர் மேடை” போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, சமூகத்தில் பேசப்படாமல் இருக்கும் விஷயங்களை வெளிக்கொண்டு வந்தார். பறையாட்டம், நாடகம், மைம் போன்ற கலை வடிவங்களின் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை எடுத்துரைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இது வெறும் தேர்தல் நிகழ்ச்சி அல்ல, சமூக மாற்றத்திற்கான ஒரு முயற்சி.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் திலகபாமாவை ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பது மட்டுமின்றி, பெரம்பூர் தொகுதி மக்கள் பெண்கள் நம்ப வீட்டு பெண்ணாக நினைத்து மனக்குமுறல்களை கொட்டி வருகின்றனர். சமீபத்தில் பெரம்பூர் பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மறுநாளே கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் பார் ஒன்றில் விடியற்காலை 6 மணி முதல் 24 மணி நேரமும் சட்டவிரோத மதுவிற்பனையை திலகபாமா கண்டறிந்தார். அத்துடன் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்து கள்ளத்தனமாக விற்க வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்ய வைத்தார். 

இது பெரம்பூர் பகுதி மக்கள் மத்தியில் திலகபாமாவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதனையடுத்து திலகபாமா வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம், “எங்கள் ஏரியாவில் தெருவிளக்கு எரியவில்லை”, “குடிநீர் வரவில்லை”, “மழை வந்தாலே வீடுகளை கழிவுநீருடன் சேர்ந்த வெள்ள நீர் சூழ்ந்துவிடுகிறது” என வேதனையைக் கொட்டும் பெண்களைக் காண முடிகிறது. குறிப்பாக “உனக்கு ஓட்டு போடுறோம்மா எங்க தொகுதியை எப்படியாவது முன்னேற்று” என திலகபாமாவிடம் வேண்டுகோள் விடுத்த மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

குறைகளை கேட்டறிவது மட்டுமின்றி அதற்கான தீர்வுகளை திலகபாமா தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளார். “என் மக்கள் என் வாக்குறுதிகள் 25” என்ற பெயரில் திலகபாமா அளித்துள்ள வாக்குறுதிகள், கவர்ச்சியான வாசகங்களாக இல்லாமல், நடைமுறைக்கு ஏற்ற திட்டங்களாக இருக்கின்றன. வானத்தைக் கிழித்து வைகுண்டம் ஏறும் அலங்காரச் சொற்களாக இல்லாமல், என்ன தேவையோ அதை முதன்மையானதாக மாற்றி, செய்து தருவேன் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். 

மழைக்காலங்களில் நீர் தேக்கம் இல்லாத வடிகால் அமைப்பு, சுத்தமான குடிநீர் வழங்குதல், கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு, பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா, 24 மணி நேர மருத்துவமனை போன்ற வாக்குறுதிகள் அனைத்தும், பெரம்பூர் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான நேரடி பதில்களாக இருக்கின்றன. இதுவே மக்கள் மத்தியில் திலகபாமாவிற்கு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.


இந்தத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது. அனுபவமுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ., மற்றும் பிரபலமான திரை முகம் ஆகியோருக்கு எதிராக திலகபாமா களம் காண்கிறார். இங்கேதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. “முன்பு வாய்ப்பு கிடைத்தவர்கள் என்ன செய்தார்கள்?” தொகுதி மக்களின் அடிப்படைக் குற்றச்சாட்டுகளான குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் பிரச்சனை, குப்பை பிரச்சனை – இன்னும் தீர்க்கப்படாதவையாகவே உள்ளன. அதே நேரத்தில், புதிய திரை முகத்தின் களப்பணி குறித்தும் மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இந்த நிலையில், நேரடியாக மக்களுடன் இணைந்து செயல்படும் திலகபாமா, ஒரு மாற்று அரசியல் வழியை முன்வைக்கிறார்.

மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு, அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்து, நடைமுறை வாக்குறுதிகளை வழங்கும் ஒரு வேட்பாளராக, செயல்பாட்டாளராக, களத்தில் வேறுபட்டு நிற்கிறார் திலகபாமா. எனவே, சொல்லும் அரசியலை அல்ல, செயல்படும் அரசியலை தேர்வு செய்ய விரும்பினால், பெரம்பூரில் திலகபாமாவிற்கு வாக்களிப்பது ஒரு முடிவு மட்டுமல்ல, ஒரு மாற்றத்தின் தொடக்கமாகவும் அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

இதையும் படிங்க: திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share