"25 வருஷ உழைப்பு.. பணி நீக்கம் செய்வதா?" மின்வாரிய ஊழியர்களுக்காக அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி!
25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்றும், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (சூலை 20, 2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களின் ஒரு மாத காலப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி தவெக அரசை மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை தங்களது வாழ்க்கையின் பெரும் பகுதியை மின்சார வாரியத்திலேயே கழித்துவிட்டு, வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகப் போராடி வருகின்றனர். முந்தைய அரசுகள் இக்கோரிக்கையை நிராகரித்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று அவர்கள் நம்பினர்.
ஆனால், மின்சாரத்துறை அமைச்சரோ, 'அடுத்த 6 அல்லது 7 மாதங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக TNPSC மூலம் நிரந்தரத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' எனச் சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். பணி நிலைப்பு கேட்டால் பணி நீக்க அறிவிப்பை வெளியிடும் தவெக அரசின் போக்கை எதிர்த்து, கடந்த ஜூன் 22 முதல் மாநிலம் தழுவிய அளவில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "கரூர் போல"..! வன்னியர் தியாகிகள் குடும்பத்தினருக்கும் அரசு வேலை..! அன்புமணி வலியுறுத்தல்..!
கடந்த 18-ஆம் தேதி மதுரையில் மின்சாரத் துறை அமைச்சரை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியும், அரசுத் தரப்பில் எந்தவிதமான நேர்மறை உத்தரவாதமும் அளிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று அன்புமணி இராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மின்வாரிய விதிமுறைகளின்படி, 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்குப் பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அன்புமணி இராமதாஸ் நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாகக் கடந்த 2004 முதல் 2007 வரை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் பிறப்பித்த ஆணையை மின் வாரியம் மதிக்கவில்லை. இதனை எதிர்த்துத் தொழிலாளர்கள் தொடர்ந்த வழக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தொழிலாளர்களைப் பணி நிலைப்பு செய்ய ஆணையிட்டது. அதன்பின் 2 நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் எனப் பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் சாதகமாகத் தீர்ப்பளித்தும், 11 ஆண்டுகளாகியும் அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தற்போது தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய முயல்வது அப்பட்டமான அநீதியாகும்.
எனவே, தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், மின் துறை அமைச்சர் அல்லது மின் துறைச் செயலாளர் உடனடியாக ஒப்பந்தப் பணியாளர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச வேண்டும். அவர்களின் பணி நிலைப்புக் கோரிக்கையை ஏற்பதாக முறையான உத்தரவாதம் அளித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அதிகாரத்தை அடகு வைக்காதீங்க..! துணைவேந்தர்கள் விவகாரம்... எச்சரித்த அன்புமணி..!