+2 பொதுத்தேர்வு விடைத்தாளில் முரண்பாடு!! மதிப்பெண்களில் வேறுபாடு! தேர்வுத்துறை விசாரணை!!
பிளஸ் 2 தேர்வில் முரண்பாடுகள்: மாணவர்கள், ஆசிரியர்களிடம் தேர்வுத்துறை விசாரணை – சந்தேக முடிவுகள் நிறுத்தி வைப்பு!
தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைத்தாள்களில் முரண்பாடுகள் மற்றும் மதிப்பெண் வேறுபாடு தொடர்பாக தேர்வுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சந்தேகத்திற்குரிய மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 27 வரை நடைபெற்றது. ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் ஏப்ரல் 4 முதல் 20 வரை 70க்கும் மேற்பட்ட முகாம்களில் மதிப்பீடு செய்யப்பட்டன.
அப்போது, விடைத்தாள்களில் உரிய முத்திரை இல்லாதது, ஒரே விடைத்தாளில் பல பக்கங்களில் கையெழுத்து மாறுபட்டிருந்தது, முதன்மை கண்காணிப்பாளர் கையெழுத்து இல்லாதது, சில பக்கங்கள் கிழிக்கப்பட்டது, மதிப்பெண் பதிவில் ஆசிரியர்களின் கவனக்குறைவு போன்ற பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
இதையும் படிங்க: கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில்.. அஜித்குமாருக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..!!
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியது. முதற்கட்டமாக சென்னையில் ஏப்ரல் 28 அன்று 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “2022-ல் மதுரையில் நடைபெற்ற விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் முறைகேடு நடந்தது. அதன் பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு முதன்முறையாக ரேண்டமாக விடைத்தாள்களை ஆய்வு செய்தபோது இத்தகைய முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சில மாணவர்கள் பக்கங்களை கிழித்துச் சென்றிருந்தது, சில பக்கங்களில் எதுவும் எழுதாமல் விட்டிருந்தது போன்றவை சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள் பக்கம் வாரியாக மதிப்பெண் பதிவு செய்வதில் கவனக்குறைவு காட்டியுள்ளனர்” என்றார்.
எனினும், இந்த விசாரணை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் எந்த தாமதமும் ஏற்படாது என்று தேர்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மே 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். சந்தேகத்திற்குரிய மாணவர்களின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும்.
மேலும், இந்த ஆண்டு முதன்முறையாக புதிய சாப்ட்வேர் மூலம் மதிப்பெண்களை சரிபார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு முழு அளவில் இந்த சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வரும். அதன் மூலம் சிபிஎஸ்இ போல் மறுகூட்டல் முறையை ரத்து செய்ய தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அட்ராசக்க...!! - வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா?