11 வருஷத்துல ஒரு முறையாவது இது நடந்திருக்கா..? பிரதமர் மோடியை விளாசிய ஜெய்ராம் ரமேஷ்..!
பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு வரவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடி மீது பல்வேறு விஷயங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
மோடி அரசு மகாராஷ்டிரத்தை முக்கிய திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் இருந்து தொடர்ந்து புறக்கணித்து, மாநிலத்துக்கு எதிராக "உணர்வற்ற மற்றும் விரோதப் போக்கை" காட்டுவதாகவும், இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கு எதிர்க்கட்சிகளின் உதவியை பிரதமர் மோடி நாடுவது, அவரது "வெளிப்படையான இரட்டை வேடத்தை" காட்டுவதாகவும், மோடி வெளிநாடுகளில் காங்கிரஸை அவமதித்ததாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ‘என் முடிவில் அரசியலைப் பார்க்காதீர்கள்..! பொறுப்புள்ள குடிமகனாக செயல்படுகிறேன்’.. சசி தரூர் விளக்கம்..!
அதேபோல் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்றும், இதற்கு மோடி அரசின் தோல்வி காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ஜெய்ராம் ரமேஷ், தற்போது பிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
"உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தின் தலைவரும் அவ்வப்போது சுதந்திரமாக செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். ஆனால் 11 ஆண்டுகளாக நமது நாட்டின் பிரதமர் எந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி தனது ஊடக உரையாடல்களை அவரே தயாரித்து, இயக்கி, எழுதியிருந்தார். அதில் ஒன்றில் அவர் தனது பிறப்பு உயிரியல் சார்ந்தது அல்ல என்று கூறினார். ஆனால் ஒருபோதும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கான துணிச்சல் அவருக்கு வரவில்லை.
இது அவருக்கு முன்பு இருந்த பிரதமர்களோடு முற்றிலும் மாறுபட்ட வழக்கமாக உள்ளது. அவருக்கு முன்பு இருந்த பிரதமர், 2 மாதங்களுக்கு ஒருமுறை தன்னிச்சையான பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார். அங்கு அவரிடம் இரக்கமின்றி கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்கும் அவர் பொறுமையாக பதிலளிப்பார். நமது ஜனநாயகத்தின் அடித்தளங்கள் இவ்வாறுதான் நிறுவப்பட்டது."
இந்த குற்றச்சாட்டுகள், மோடி அரசின் கொள்கைகள், நிர்வாகம் மற்றும் அரசியல் அணுகுமுறை மீதான காங்கிரஸின் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறன. மேலும் பிரதமர் மோடியின் பேச்சுகளில் "பொய்கள் மற்றும் வரலாற்று திரிப்பு" இருப்பதாகவும், மக்களின் உண்மையான பிரச்னைகளை திசை திருப்புவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதையும் படிங்க: பாஜகவோடு நெருங்கும் சசிதரூர்..! காங். பட்டியலில் இல்லாதபோதும் 7 கட்சி குழுவில் இடம் பெற்றது எப்படி?