இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழிலதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!
சுவீடன்- இந்தியா இடையிலான தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான வழித் தடத்தை உருவாக்குவதில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்துக்குப் பிறகு சுவீடன் சென்றடைந்தார். ஸ்டாக்ஹோமில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் உடன் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டில் வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பாதுகாப்பு, புதிய ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சந்திப்பின் முக்கிய முடிவாக, இந்தியா-சுவீடன் உறவுகளை உத்திசார் கூட்டாண்மை (Strategic Partnership) நிலைக்கு உயர்த்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பின்னர் மூவரும் இணைந்து நிருபர்களுக்கு பொது அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “சுவீடனுடன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் வலுவான வழித்தடத்தை உருவாக்குவதில் இந்தியா இணைந்து செயல்படும்” என்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் சுவீடன் வழங்கிய உறுதியான ஆதரவுக்கு பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு நன்றி தெரிவித்த மோடி, பயங்கரவாதத்துக்கு எதிரான இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பயணத்தின்போது உலகின் முன்னணி கப்பல் நிறுவனமான மெர்ஸ்க் குழுமத்தின் தலைவர் ராபர்ட் மெர்ஸ்கை மோடி சந்தித்துப் பேசினார்.
இதையும் படிங்க: 300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!
இந்த சந்திப்பில் வர்த்தக வசதிகள், துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோதன்பெர்க் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய தொழில்துறை வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுவீடன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னணி தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.
“சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் புதுமை மையப்பட்ட கொள்கைகளால் இந்தியாவின் வளர்ச்சி ரயில் முழு வேகத்தில் செல்கிறது” என்று கூறிய அவர், உற்பத்தித்துறை, தூய்மையான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் சுவீடன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் இளம், திறமையான பணியாளர் படை, விரிவடையும் நடுத்தர வர்க்கம் மற்றும் ‘தொழில் செய்வதற்கான எளிமை’ (Ease of Doing Business) சீர்திருத்தங்கள் உலக முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சமாக, சுவீடன் அரசின் உயரிய விருதான ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார் - கமாண்டர் கிராண்ட் கிராஸ் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இந்தியா-சுவீடன் உறவுகளுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமைக்கு அங்கீகாரமாக இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!