×
 

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! கோவையில் பலத்த பாதுகாப்பு.. டிரோன்களும் பறக்க தடை..!!

பிரதமர் மோடி வருகையால் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 15-ம் தேதி நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் என்.டி.ஏ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நாளை (18-ம் தேதி) தமிழகம் வருகிறார்.

நாளை மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மாலையில் கோவை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடிசியா மைதானத்திற்கு செல்லவுள்ளார்.

அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் வானதி சீனிவாசன் மற்றும் அவினாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார். பொதுக்கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் மீண்டும் கோவை விமான நிலையம் வந்து டெல்லி திரும்புகிறார்.

இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!

இந்த கூட்டத்தை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமர்வதற்கு ஏராளமான இருக்கைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாஜக, அதிமுக மற்றும் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமரின் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரம் முழுவதும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினரும் கோவை வந்துள்ளனர். அவர்கள் விமான நிலையம், மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்நுழையும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிவப்பு மண்டல பகுதிகளுடன், அவினாசி சாலை, ஹோப்ஸ் ரோடு, கொடிசியா, பீளமேடு, சித்ரா, காந்திமாநகர், சிங்காநல்லூர், நேருநகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் மற்றும் இருகூர் உள்ளிட்ட பகுதிகளும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இன்று பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பிரதமரை எப்படி வரவேற்று அழைத்துச் செல்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய முழுமையான ஒத்திகை நடைபெற்றது.

இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! அடுத்த வாரம் வாஷிங்டன் செல்கிறது இந்திய குழு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share