×
 

பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைமைப் பதவி மற்றும் சின்னம் தொடர்பான விவகாரத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை மற்றும் 'மாம்பழம்' சின்னம் தொடர்பாகத் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் சட்டப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாமக தலைவராகத் தன்னைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தொடர்ந்துள்ளார்.


பாமகவுக்கு 'மாம்பழம்' சின்னத்தை ஒதுக்கித் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம், ராமதாஸின் முகவரிக்கு வராமல் அன்புமணியின் முகவரிக்குச் சென்றது. இதை எதிர்த்து ராமதாஸ் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 2025 மே மாதமே முடிந்துவிட்டது என்றும், அவர் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து தலைவராக நீடிப்பதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். கட்சித் தலைமை அலுவலக முகவரியையும் ராமதாஸுக்குத் தெரியாமல் மாற்றியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ராமதாஸ் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், தேர்தல் ஆணையத்தின் சில நடவடிக்கைகளால் 'மாம்பழம்' சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளார். எனவே, கட்சியின் உண்மையான தலைவர் யார் என்பதைத் தேர்தல் ஆணையம் இறுதி செய்யும் வரை தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது எனக் கோரியுள்ளார். தானே கட்சியின் சட்டப்படியான தலைவர் என்றும், ராமதாஸ் தரப்பு கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழு மட்டுமே" என்றும் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். மேலும், 2026 ஆகஸ்ட் வரை தான் தலைவராக நீடிப்பதாக அவர் கூறி வருகிறார்.

இதையும் படிங்க: பா.ம.க. தேர்தல் அறிக்கை... 7 பேர் கொண்ட வலுவான குழுவை அமைத்தார் அன்புமணி ராமதாஸ்!

தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (பிப்ரவரி 20) இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு பாமகவின் தேர்தல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியத் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 70 ஆண்டு கடனை 5 ஆண்டில் வாங்கிய திமுக! அன்புமணி இராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share