×
 

அன்புமணி எம்.பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!

பாமக தலைவர் அன்புமணி, ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினராக (Rajya Sabha MP) தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, அவரது தந்தை டாக்டர் ராமதாஸின் நேர்முக உதவியாளர் சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவி வரும் உட்கட்சிப் பூசல், தற்போது சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

சுவாமிநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், அன்புமணி ராமதாஸ் தனது வேட்புமனுவின் போது போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பாமக-வின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் கடந்த 2025 மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், அவர் இன்னும் தலைவர் பதவியில் இருப்பதாகப் பொய்யான ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தவறான ஆவணங்களின் அடிப்படையில் அவரது ராஜ்யசபா வேட்புமனு ஏற்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

ஏற்கனவே டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ அல்லது கொடியையோ பயன்படுத்தக் கூடாது எனச் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ராமதாஸின் வலதுகரமாக அறியப்படும் சுவாமிநாதன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதால், இது ராமதாஸின் நேரடி ஆசிர்வாதத்துடன் நடந்த நடவடிக்கையாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அன்புமணியின் வேட்புமனு தாக்கலின் போது சுவாமிநாதன் எதிர்ப்புத் தெரிவித்ததும், அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழக தேர்தலில் ராமதாஸ் அணிக்கு 'சிலிண்டர்' சின்னம்! 30 வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு!

பாமக-வில் நிலவும் இந்தத் தந்தை - மகன் மோதலை துரதிர்ஷ்டவசமான ஈகோ மோதல் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே வர்ணித்துள்ளது. தற்போது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த உட்கட்சி விவகாரங்கள் குறித்து மே 10-ஆம் தேதிக்குப் பிறகு விரிவாக விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அன்புமணிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த ராஜ்யசபா தேர்தல் வழக்கு, பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது! கைதிகள் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share