×
 

6 மாதத்திற்கு முன்பே நடந்த நிஜ 'ஜெய்பீம்' சம்பவம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

தேனியில் இளைஞர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக மானாமதுரை குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் என்ற இளைஞர் விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 44 காயங்கள், உட்பட தலையில் மற்றும் மார்பில் காயங்கள், மிளகாய்ப் பொடி பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளிட்டவை மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவமே நாட்டை உலுக்கியுள்ள நிலையில், தற்போது தேனி போலீசார் பட்டியலின இளைஞரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருப்பவர் அபுதல்ஹா. இந்நிலையில், தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு இளைஞர் ஒருவரை அழைத்து வந்த காவல்துறையினர், அந்த இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து, ஆய்வாளர் அபுதுல்ஹா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு உள்ளிட்டோர் ஷூ காலால் எட்டி உதைத்து, லத்தியால் தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. சிசிடிவியில் 14-01-2025 என்று இருப்பதால், இந்த சம்பவம் 6 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. போட்டு பொளக்கும் அன்புமணி..!

இந்த வீடியோ விவகாரம் குறித்த விசாரணையில் அந்த வீடியோவில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதும் அவரது பெயர் ரமேஷ் என்பதும் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ஆனால் இவரை ஏன் காவல்துறையினர் இழுத்து வந்து, கண்மூடித்தனமாக தாக்கினர் என்பது குறித்தான தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இதனையடுத்து இந்த சிசிடிவியின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

திருப்புவனம் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் தேனி போலீசார் பட்டியலின இளைஞர் ஒருவரை ஆறு மாதத்திற்கு முன்பு தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியிருப்பதால், மக்களுக்கு காவல்துறை மேல் உள்ள நம்பிக்கை மொத்தமாக இழந்துள்ளது. 

காவல்துறையினரின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், குற்றம் செய்த காவல்துறையினர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு தாமாக முன்வந்து, தாக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இளைஞரின் தற்போதைய நிலை என்ன? அவர் என்ன வழக்கிற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்? என்பது குறித்து உரிய விசாரணை செய்து,  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

இதையும் படிங்க: திருப்புவனம் இளைஞர் மரணம்: நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டோம்.. கொதித்தெழுந்த அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share