தித்திக்கும் பொங்கல் திருநாளாம் நாளை..!! வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது தெரியுமா..??
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்பதை தெரிந்துகொள்வோம்.
தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழ் சமூகத்தினரால் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இயற்கையின் அருள், சூரியக் கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்தில், இவ்விழா போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களாக கொண்டாடப்படுகிறது.
உழவர்களும், உழவுக்காளைகளுமே இந்தத் திருநாளின் முதன்மை ஹீரோக்கள் எனலாம். சூரியன் தனுராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வையே தை மாதப் பிறப்பு எனக் குறிப்பிடுகிறோம். இதனை இந்தியாவின் பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு (2026) பொங்கல் விழா நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படவுள்ளது. வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடும் பழக்கம் உள்ளவர்கள், தை முதல் நாள் அதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலில் அழகிய வண்ணக் கோலங்கள் போட்டு, வீட்டை அலங்கரித்து, தைத் திருநாளை வரவேற்பது மரபு. அன்று புதிய பானையில் புதிய அரிசியைப் போட்டு, பால் பொங்கி வரும் தருணத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி "பொங்கலோ பொங்கல்!" என மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவார்கள்.
இதையும் படிங்க: பொங்கல் வாழ்த்துக்கள்… வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்… தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி..!
இந்தப் பொங்கலை சூரியக் கடவுளுக்கு படைத்து, பூமியின் வளமைக்குக் காரணமான இயற்கைக்கும், கதிரவனுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பார்கள். இந்தச் சிறப்பு நாளில், சிலர் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் என இரு வகையான பொங்கல்களைத் தயாரித்து சூரியக் கடவுளுக்கு வழிபடுவார்கள். மற்றவர்கள் பொங்கலுடன் பல்வேறு காய்கறிகளைச் சேர்த்து சமைத்து படையல் செய்வார்கள்.
இஞ்சி, மஞ்சள் குலை, கரும்பு, வாழைப்பழம், தானிய வகைகள் போன்றவற்றையும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணித்து, விவசாயம் செழித்தோங்க வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். சூரியப் பொங்கல் வைக்கும் மரபு உள்ளவர்கள், காலை 6 மணிக்கு முன்பு சூரியன் உதயமாவதற்கு முன்பே பொங்கல் தயாரித்து, கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். இது சூரியப் பொங்கலாகக் கருதப்படுகிறது. இதற்கு சிறப்பு முகூர்த்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், காலை 6 மணிக்குப் பிறகு பொங்கல் வைக்க விரும்புபவர்கள், நல்ல நேரத்தில் அதைச் செய்யலாம்.
பொங்கல் வைப்பதற்கான சிறப்பு நேரங்கள்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மற்றும் காலை 10.35 மணி முதல் பகல் 1 மணி வரை. இந்தப் பொங்கல் திருநாள், தமிழர்களின் கலாச்சாரம், விவசாயப் பாரம்பரியம் மற்றும் இயற்கைக்கான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான விழாவாகத் திகழ்கிறது.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதை தங்கள் வீடுகளில் கொண்டாடி, தங்கள் வேர்களை நினைவுகூர்கின்றனர். விவசாயிகளின் உழைப்பைப் போற்றும் இவ்விழா, சமூக ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது. இந்த ஆண்டு பொங்கல், அனைவருக்கும் மகிழ்ச்சியும் வளமும் தரட்டும்!
இதையும் படிங்க: தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம்.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து...!