அதிரடியாய் உயர்ந்த அரிசி விலை! இல்லத்தரசிகளுக்கு பேரிடி! விளைச்சல், வரத்து குறைவால் சோகம்!
கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் சன்னரக அரிசி விலை, கிலோவுக்கு, 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சன்னரக அரிசி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து அரிசி மற்றும் நெல் வரத்து குறைந்துள்ளதால், சில்லரை சந்தையில் கிலோவுக்கு 5 முதல் 7 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரிசிக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தி மட்டுமே முழுமையாக தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் மோட்டா ரக நெல் விளைவிக்கப்படுகிறது.
அவற்றில் பெரும்பகுதியை அரசு பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், உயர்தர சன்னரக நெல் உற்பத்தி மாநிலத்தில் குறைவாக இருப்பதால், அண்டை மாநிலங்களின் வரத்தையே தமிழகம் பெருமளவில் நம்பியுள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய திட்டம்! முதல்வர் விஜய் கறார்! பெரிய பிரச்னையாகிவிடும் என அச்சுறுத்தும் அதிகாரிகள்!
தமிழகத்தின் ஆண்டு அரிசி தேவை சுமார் 91 லட்சம் டன் என மதிப்பிடப்படுகிறது. இதில் மாநில உற்பத்தி 75 லட்சம் டன் அளவிலேயே உள்ளது. மேலும், கேரளாவுக்கும் கணிசமான அளவில் அரிசி அனுப்பப்படுவதால், தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த குறையை ஈடுகட்ட ஆண்டுதோறும் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து உயர்தர சன்னரக அரிசி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவின் சில பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தற்போது தமிழக சந்தைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அரிசி வியாபாரிகள் கூறுகையில், கடந்த மாதம் வரை தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வந்த சன்னரக நெல் மற்றும் அரிசி வரத்து தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதன் விளைவாக, மொத்த சந்தையில் 26 கிலோ எடையுள்ள சன்னரக அரிசி மூட்டையின் விலை 1,150 ரூபாயில் இருந்து 1,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் கிலோவுக்கு 3 முதல் 4 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், சில்லரை சந்தையில் 5 முதல் 7 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. வரத்து தொடர்ந்து குறைந்தால், வரும் வாரங்களில் அரிசி விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சமும் வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது.
இதையும் படிங்க: யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!