தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்..!! அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம்..!!
தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு (2026) தயாராகும் வகையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்து வந்த கேசவ விநாயகத்தை நீக்கிவிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரஷோப குமாரை புதிய மாநில அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே. அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டங்களில் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனையில், தேர்தல் உத்திகள், வேட்பாளர் தேர்வு, அமைப்பு வலுப்படுத்தல் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்
பிரஷோப குமார் தற்போது ஆர்.எஸ்.எஸ் வடதமிழக அமைப்பாளராக பணியாற்றி வருபவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புப் பணிகளில் நீண்டகால அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம், ஆர்.எஸ்.எஸ் - பாஜக இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேசவ விநாயகம் 2015ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இணைந்து அமைப்புப் பொறுப்புகளை வகித்து வந்தவர். அவர் இப்போது முழுநேர ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம் தமிழ்நாடு பாஜகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி அணிகளை வலுப்படுத்துதல், தொகுதி அளவிலான பயணங்கள், தொண்டர்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பிரஷோப குமாரின் பங்கு முக்கியமானதாக இருக்கும். புதிய பொதுச்செயலாளர் நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனிப்பட்ட காரணங்களால் தேர்தல் பணிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாஜக தலைமை, தமிழ்நாட்டில் தனது தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் உடனான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக கூட்டணி வியூகம்: நாளை சென்னை வருகிறார் பி.எல். சந்தோஷ்!