காங். நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றது ஏன்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்! பிரேமலதா சொன்ன விஷயம்..!
காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சி.கே பெருமாளின் 'அரசியலில் 60 ஆண்டுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார்.
ஏற்கனவே கூட்டணி விவகாரத்தில் தேமுதிக சரியான நிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் கலந்து கொண்டது பேசு பொருளானது. இந்த நிலையில், காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார். கோவை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரின் நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் என்ற முறையில் தான் சுதீஷ் பங்கேற்றதாக விளக்கம் அளித்தார். காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றதற்கும், கட்சிக்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நடுத்தர மக்களைப் பத்தி சிந்திச்சீங்களா? - மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கை..!
ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அவரவர் நிலைப்பாடு என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நன்றாக தான் இருக்கும் என்று கூறினார். பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி இருப்பதாகவும், அதுபோல் தமிழகத்தில் நடந்தால் நன்றாக இருக்கும் அதனை தான் வரவேற்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் வளர்ச்சியை உற்று நோக்கி சுற்றுப்பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தாங்கள் நடத்த இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் டாஸ்மாக், போதை வஸ்துக்கள், கொகைன் போன்ற பல்வேறு போதை கலாச்சாரகள் இருப்பதாகவும் அதனை யாரும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நடிகர்கள் இரண்டு பேர் மட்டுமே குற்றவாளிகள் என்று உற்று நோக்கப்படுவது சரியல்ல என்றும் தமிழ்நாட்டை போதையில்லா மாநிலமாக உருவாக்கி இளைஞர்களுக்கும் மக்களுக்கும் நல்ல எதிர்காலத்தை தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தமிழுக்கு குறைவான நிதி... இது ஆதிக்கத்தின் வெளிபாடு... கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை!!