கோடையை குளிர்விக்க.. ஜில்லென மாறப்போகும் தமிழகம்..!! எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா..??
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை ஓரளவு மாறுபட்டு காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழக உள் மாவட்டங்களிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை (trough) நிலவி வருவதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளான தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 3 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். ஏப்ரல் 4 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெயிலுக்கு விட்டாச்சு லீவு! ரெண்டு நாள் நிம்மதி!! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை!!
ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுவதும் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.ஏப்ரல் 7 ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வடக்கு உள் தமிழகப் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு: ஏப்ரல் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. ஏப்ரல் 3 முதல் 5 வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலையுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் வெப்பநிலை இயல்பு அளவிலேயே இருக்கும். ஏப்ரல் 3 முதல் 5 வரை சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, தமிழகத்தில் வெப்பம் சற்று அதிகரிக்கும் நிலையில், சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் வானிலை முன்னறிவிப்பை உன்னிப்பாக கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது
இதையும் படிங்க: வெயிலுக்கு விட்டாச்சு லீவு! ரெண்டு நாள் நிம்மதி!! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை!!