நாங்க ஒண்ணும் பாஜகவுக்கு அடிமை கிடையாது... டெல்லிக்கே கேட்குற அளவுக்கு சத்தமாக சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்...!
நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது- எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக நடந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:- நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது. அதிமுக யாரையும் அடிமைப்படுத்தாது. எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது. அதிமுக தொண்டர்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்.எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் வல்லமை கொண்டவர்கள் அதிமுக தொண்டர்கள். தமிழ்நாட்டை மீட்பது தான் எங்களது பணி. மக்களை ஏமாற்றி குழப்பம் விளைவிக்க மாட்டோம். மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற முடியும்.
அதிமுகவாகிய நாங்கள் நிதி கேட்டால் டெல்லி கொடுக்கும். திமுக ஆட்சியில் கொரோனோ போன்ற சூழல் வந்திருந்தால் மக்கள் செத்து மடிந்திருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து வந்தார் என சொல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அதிமுக கட்சி இன்று இருப்பதற்கு காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான். சரித்திரத்தில் இடம்பெறும் தலைவராக தன்னை உருவாக்கிக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் வாரிசு என சொன்னவர்கள் பதவிக்காக இன்று திமுகவிற்கு ஓடிச் சென்றுவிட்டார்கள். நான் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொறுப்போடு நடந்து கொள்கிறேன். பணக்காரர்களின் கனவை நனவாக்கத் துடிக்கும் திமுகவுக்கு ஏழை மக்களின் கஷ்டம் தெரியாது. பட்டாசு, தீப்பெட்டி அச்சு போன்ற தொழிற்சாலைகளில் பணியாற்றியவன் நான்.எனக்குத்தான் சிவகாசி மக்களின், தொழில்களின் கஷ்டம் தெரியும். சிவகாசியில் நடந்து வரும் சுற்றுவட்டச் சாலை, ரயில்வே மேம்பாலங்கள் பணி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விளக்கம் கேட்டுப் பெற்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: காலை வாரத்துடிக்கும் காங்கிரஸ்... 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு...எச்சரித்த ராஜேந்திர பாலாஜி..!
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஆய்வு என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்து மூடப்பட்டுள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளும் திறக்கப்படும். அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள புதிய பட்டாசுக் கடைகளுக்கு உடனே உரிமம் வழங்கப்படும். மக்களின் உரிமைக்காக, வாழ்வுக்காக போராடும் கட்சி அதிமுக. ஒரு நிமிடம் தவறு செய்தால் ஐந்து ஆண்டுகள் திமுகவினர் பழிவாங்கி விடுவார்கள். சிவகாசி சட்டமன்றத் தொகுதி மீட்டெடுக்கப்பட வேண்டு மென்பதே நமது சித்தாந்தமாக இருக்க வேண்டும். தமிழக மக்களுக்கு யார் வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்றார்.
இதையும் படிங்க: “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!