பாமகவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மீது அன்புமணி புகார்...!
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் அன்புமணி புகார் கொடுத்துள்ளார்.
ராமதாஸ் நடத்தும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கும் பாமகவிற்கும் சம்பந்தமில்லை என அன்புமணி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் தொடங்கிய பிரச்சினை இன்று வரை அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையில் தீர்வு கிடைக்காமல் நடந்து வருகிறது.
பாமகவின் தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் தானே என ராமதாஸ் கூறுகிறார். மறுபக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார். இருவருக்கும் இடையிலான பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனை கட்சியில் பிளவை ஏற்படுத்தியது.
அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ராமதாசை செயல் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கினார் ராமதாஸ். இருவருக்கும் இடையிலான பிரச்சினை தீர்வு ஏற்படாமல் நீண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க தொடங்கிவிட்டன. அன்புமணி ராமதாஸ் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என அறிவித்தார். அன்புமணி விருப்பமனுக்கள் கொடுக்கலாம் என கூறி இருப்பது தவறான விஷயம் என்றும், பொய்யான விஷயம் என்றும் ஜி.கே. மணி தெரிவித்தார். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. சேலத்தில் வரும் 29ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட்டுகிறார்.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... விரைவில் கூட்டணியை அறிவிக்கும் ராமதாஸ்... ஜி.கே.மணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...!
இந்த நிலையில் ராமதாஸ் மீது அன்புமணி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ராமதாஸ் கூட்டி உள்ள பொதுக்கூட்டத்திற்கும் பாமகவிற்கும் சம்பந்தமில்லை என்றும் பொதுக்குழுவை கூட்டவும் தலைமை ஏற்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற வழக்குகளில் பாமக தலைவர் நான்தான் என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் சேலத்தில் 29ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டம் பாமக கூட்டம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் பாமகவினரை கட்டுப்படுத்தாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது நடக்கும்னா பாமகவில் இருந்து வெளியேற தயார்… மனம் திறந்த ஜி.கே. மணி…!