ஆரம்பிக்கிது தங்கவேட்டை! இந்தியா வருகிறது பல மெட்ரிக் டன் தங்கம்! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!
இந்தியா தங்கத்தை நாடு கொண்டு வரும் முயற்சியை தீவிரப்படுத்தியது – கடந்த 6 மாதங்களில் 104 டன் தங்கம் இறக்குமதி!
வெளிநாடுகளில் தங்கத்தை இருப்பு வைப்பது பாதுகாப்பற்றது என்பதை உணர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கத்தை இந்தியாவுக்குள் கொண்டு வரும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 104 மெட்ரிக் டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்த தங்கக் கையிருப்பு 880 மெட்ரிக் டன் ஆகும். இதில் பெரும்பாலானவை வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முன்பு பிரிட்டனில் உள்ள பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கியிலும் கணிசமான அளவு தங்கம் இருந்தது.
உக்ரைன் போர் தொடங்கியபோது, ரஷ்யாவின் அந்நியச் செலாவணி மற்றும் சொத்துக்களை ஜி7 நாடுகள் பறிமுதல் செய்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோதும் அந்நாட்டின் அந்நியச் செலாவணி முடக்கப்பட்டது. இத்தகைய சர்வதேச அரசியல் சிக்கல்களால், வெளிநாடுகளில் தங்கம் மற்றும் அந்நியச் செலாவணியை வைத்திருப்பது பாதுகாப்பற்றது என்ற எச்சரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!
இதை உணர்ந்த ரிசர்வ் வங்கி, வெளிநாடுகளில் உள்ள தங்கத்தை படிப்படியாக இந்தியாவுக்கு மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2023 மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்த தங்கத்தின் அளவு மொத்த கையிருப்பில் 37 சதவீதமாக மட்டுமே இருந்தது. இப்போது அது 77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
தற்போது பேங்க் ஆப் இங்கிலாந்தில் இன்னும் 197 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதாகத் தெரிகிறது. இதையும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர ரிசர்வ் வங்கி முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளும் தங்களது தங்கக் கையிருப்பை மேற்கத்திய நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கே மாற்றும் போக்கை அதிகரித்து வருகின்றன. இது உலகளாவிய அளவில் பொருளாதார பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, இந்திய ரூபாயின் நிலைத்தன்மைக்கும், நாட்டின் நிதி பாதுகாப்புக்கும் வலு சேர்க்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கனவுகளின் தேசிய போட்டி..!! நாளை மறுநாள் நீட் தேர்வு..!! AI மூலம் கண்காணிப்பு..!!