அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!
அதிமுக 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் அனைத்துத் தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த சூழலில், அவர்களின் அவசர ராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொண்டு சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக தலைமை கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சித் தாவல் விவகாரத்தில் தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகர் முன் நிலுவையில் இருக்கும்போதே, திட்டமிட்டு ராஜினாமாக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சபாநாயகரிடம் கடிதங்களை அளித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் அமைச்சரைச் சந்தித்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!
ராஜினாமாக் கடிதம் குறித்து சபாநாயகர் நடத்தும் விசாரணை என்பது வெறும் சம்பிரதாய நடைமுறை அல்ல, அது அரசியல் சாசனக் கடமை. ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவொரு அர்த்தமுள்ள முறையான விசாரணையும் நடத்தப்படாமல் தன்னிச்சையாக ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது என்று காரசாரமாக வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பும்போது, அவரை அப்பதவியில் நீடிக்குமாறு யாரும் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோ முடியாது. சட்ட விதிகளின்படி அளிக்கப்பட்ட ராஜினாமாவை ஏற்பதே சபாநாயகரின் ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வ கடமையாகும் எனத் திட்டவட்டமாக வாதிட்டார்.
தொடர்ந்து ஆஜரான ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்களின் வழக்கறிஞர்கள், எங்களது ராஜினாமா முடிவு குறித்து எங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு மட்டுமே கேள்வி கேட்கும் உரிமை உண்டு; இதில் மற்றவர்கள் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். அனைத்துத் தரப்பு காரசார வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் இறுதித் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கருணை அடிப்படையில் பணி நியமனம்... மத்திய மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..! ஹைகோர்ட் திட்டவட்டம்..!!