×
 

சென்னையில் சாலை விபத்து மரணங்கள் 10% குறைவு: போக்குவரத்து காவல்துறை சாதனை!

சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையினரின் கேமரா, விழிப்புணர்வு காரணமாகச் சாலை விபத்து உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகரம் முழுவதும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளே இல்லாத நிலையை உருவாக்கவும் போக்குவரத்து காவல் துறை பல்வேறு அதிரடி உத்திகளைக் கையாண்டு வருகிறது. சாலை ஒழுக்கத்தைப் பேணுதல், பாதுகாப்பு உபகரணங்களின் அவசியத்தை வலியுறுத்துதல் போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நவீன கேமராக்கள், வேக ரேடார் அமைப்புகள் மூலம் அதிவேகப் பயணம், தலைக்கவசம் அணியாமை, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் அமலாக்க நடவடிக்கைகள் சாலைப் பயனாளர்களிடையே ஒரு பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, கடந்த 15.12.2024 வரை சென்னையில் 519 விபத்து மரணங்கள் நிகழ்ந்திருந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் (15.12.2025 நிலவரப்படி) அந்த எண்ணிக்கை 469-ஆகக் குறைந்துள்ளது. இது 10 சதவீத வீழ்ச்சியாகும். அதைவிட ஆச்சரியப்படும் விதமாக, கடந்த ஆண்டு பதிவான 2,093 கொடுங்காய விபத்து வழக்குகள், இந்த ஆண்டு வெறும் 721-ஆகச் சரிந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 66 சதவீதம் குறைவாகும். விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து, அங்குச் சாலை விளக்குகள், எச்சரைப் பலகைகள் மற்றும் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்தியதும் இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சாலைப் பாதுகாப்பு தொடர்பான இந்தப் பயணத்தில் பள்ளி குழந்தைகள் முதல் ஓட்டுநர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பிரத்யேகப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் பாதுகாப்புக் கல்வித் திட்டங்களைப் போக்குவரத்து காவல் துறை வழங்கி வருகிறது. நிபுணர்களின் ஆலோசனையோடு முன்னெடுக்கப்படும் இத்தகைய தொழில்நுட்ப அணுகுமுறைகள், விபத்துகளைக் குறைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களிலும் சாலைப் பாதுகாப்பிற்குத் தங்களது உச்சகட்ட முன்னுரிமை தொடரும் என்றும், விபத்து இல்லாச் சென்னையை உருவாக்குவதே தங்களது இலக்கு என்றும் போக்குவரத்து காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தப்பாட்டம் முதல் சிலம்பாட்டம் வரை! பொங்கல் கலைத்திருவிழாவிற்கு தயாராகும் தலைநகரம் - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

இதையும் படிங்க: “சென்னைக்கு இன்னொரு வைரம்!” – புத்துயிர் பெற்ற விக்டோரியா ஹால், நாளை திறப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share