"பல ஆண்டுகள் போலீசுக்கு டிமிக்கி..! ரவுடி கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சரணடைந்த சரித்திர பதிவேடு குற்றவாளி..!!
பிரபல ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பிறகு சரணடைந்தார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி பெரிய மகேஷ் கொலை வழக்கில், பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான வினோத் என்ற கொக்கி வினோத், இன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பெருங்களத்தூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கொக்கி வினோத் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த அவர், இன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சரணடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பெரிய மகேஷ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை வழக்கின் பின்னணியில் ரவுடிக் கும்பல்களுக்கிடையேயான முன்விரோதமும், ஆதிக்கப் போட்டியும் இருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.காவல்துறை விசாரணையின்படி, பெரிய மகேஷ் தனது எதிரியான சிவக்குமார் என்பவரைக் கொலை செய்ய திட்டமிட்டு, தினேஷ் என்பவரை கூலிப்படையாக நியமித்திருந்ததாக கூறப்படுகிறது. சிவக்குமார் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பெரிய மகேஷும் தினேஷும் அவரைத் தேடி புதுச்சேரிக்குச் சென்றனர். ஆனால், அங்கு சென்ற பின்னர் தினேஷ் தனது விசுவாசத்தை மாற்றி, பெரிய மகேஷின் திட்டம் குறித்து சிவக்குமாரின் தரப்பினருக்கு தகவல் தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிவக்குமாரும் அவரது ஆதரவாளர்களும் இணைந்து, பெரிய மகேஷை காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்திற்கு வரவழைத்து, திட்டமிட்டு வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலைக்குப் பின்னர், உடலை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கொக்கி வினோத் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரிய மகேஷ், பிரபல ரவுடியான திண்டுக்கல் பாண்டியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், வசூல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!
இந்நிலையில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் கொக்கி வினோத் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது வழக்கின் விசாரணையில் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: காத்து வாங்கிய மகளிர் அணி கூட்டத்தால் கடுப்பான பழனிசாமி! 400க்கு 200 மட்டுமே ஆஜர்! கடும் அதிருப்தி!