×
 

சினிமாவை மிஞ்சிய பயங்கரம்... தொழிலாளியை கூலிப்படையுடன் சேர்ந்து கொன்ற முதலாளி... காட்டிக்கொடுத்த ‘பச்சை’....!

முதலாளி கூலிப்படையுடன் சேர்ந்து தொழிலாளியை அடித்து கொலை... இரவோடு இரவாக கல்குவாரியில் வீசிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே    சமையல் மாஸ்டரை கொன்று கத்தேரி ஊராட்சி கள்ளிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் வீசிய கும்பலை போலீசார்  12 நாட்களில் கூண்டோடு கைது செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு...

 சங்ககிரியை அடுத்த  கத்தேரி ஊராட்சி கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி குட்டையில், கடந்த 11-ம் தேதி பச்சை நிற வலையால் உடல் முழுவதும் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக சங்ககிரி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சங்ககிரி போலீசார் சடலத்தை கைப்பற்றி முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்ததால் கொலை வழக்காக மாற்றினர்.

சங்ககிரி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் சங்ககிரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல்,உள்ளிட்டோர் அடங்கிய  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.கல்குவாரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யப்பட்டதுடன், அப்பகுதியில் பதிவான சுமார் 3 லட்சம் செல்போன் எண்களும் ஆய்வு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அரசு விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

இறந்தவரின் கையில் ‘RENU’ என பச்சை குத்தியிருந்த அடையாளத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றது.இதில், சடலமாக கிடந்தவர் ஈரோடு பழைய ரயில் நிலையம்  பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (41) என்பதும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நாட்டு கோழி வறுவல் கடையில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து கடை உரிமையாளரான குமாரபாளையம்  பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (41) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

போலீசார் தேடுவதை அறிந்த சௌந்தர், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல கேரளா விமான நிலையம் நோக்கி சென்றபோது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், ஆனந்த் தன்னிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி திருப்பித் தராமலும், கடையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு  வந்ததாகவும் இதன் காரணமாக ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் சௌந்தர் ஆட்டோ டிரைவர்களான முஸ்தபா என்ற அலாவுதீன் (30), அருள் (30), குல்பிர் பாஷா (45) ஆகியோருக்கு மதுவாங்கி கொடுத்து மது போதையில் சேர்ந்து ஆனந்தை கடையில் வைத்து தாக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் ஆனந்தின் உடலை ஆட்டோவில் ஏற்றி கத்தேரி கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள  கல்குவாரிக்கு கொண்டு சென்று வீசியதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்நிலையில் கடை உரிமையாளர் சௌந்தர்  நேற்று கைது செய்யப்பட்டதோடு   தலைமறைவாக இருந்த புள்ளா கவுண்டம்பட்டி வினோபாஜி நகர் பகுதியில் சேர்ந்த முஸ்தபா என்ற அலாவுதீன்,(32),குமாரபாளையம் குலத்துகாடு பகுதியை சேர்ந்த குல்பிர் பாஷா(46),,குப்பாண்டபாளையம் பூளக்காடு பகுதியை சேர்ந்த அருள்(30), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த  முருகன் (49)ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை  போலீசார் கூண்டோடு அதிரடியாக கைது செய்தனர்.

போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.தனது கடையில் வேலை பார்த்த கூலி தொழிலாளியை முதலாளி கூலிப்படைக்கு மதுவாங்கி கொடுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓட முயன்ற கடை உரிமையாளர் உட்பட 5 பேர் கொண்ட கொலை கும்பலை   12 நாட்களில் கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாவட்ட எஸ்.பி. குத்தாலிங்கம் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரபல கோயிலில் வசூல் வேட்டையாடிய தவெக நிர்வாகிகள்... போலி ரசீது அடித்து பணம் வசூலித்தது அம்பலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share