திமுகவின் EVM குற்றச்சாட்டு..! ஆதாரம் இல்லை... தேர்தல் அதிகாரி விளக்கம்..!!
EVM இயந்திரங்களில் குளறுபடி என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் அதிகாரி சமீரன் விளக்கம் கொடுத்தார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முடிவைத் தொடர்ந்து, சில வாக்குச்சாவடிகளில் தனக்கு ஆதரவாக பதிவானதாக எதிர்பார்க்கப்பட்ட வாக்குகள் இயந்திரங்களில் பதிவாகவில்லை என்ற சந்தேகத்தை முன்வைத்து ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில், தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி ஜூலை 29 முதல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சேமிப்புக் கிடங்கில் தொடங்கியது. இந்தப் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ். சமீரன் மேற்பார்வையிட்டார். வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் முன்னிலையில் பாலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
முதலில் இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை காட்டப்பட்டு, பின்னர் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அவற்றின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டது.இந்த ஆய்வுப் பணி நான்காவது நாளாகத் தொடர்ந்தபோது, திமுக தரப்பில் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன. திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர், ஆய்வு செய்யப்பட்ட எட்டு இயந்திரங்களில் மூன்று சரியாக இயங்கவில்லை என்றும், சில இயந்திரங்களில் இரண்டு சீல்கள் இல்லாமல் இருந்ததாகவும், புதிய அட்ரஸ் டேக் பொருத்தப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!
குறிப்பாக பூத் எண் 57-இல் உள்ள இயந்திரங்களில் சீல்கள் இல்லாததால் அவற்றைச் சீல் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக 30 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை என்றும் கூறினர். இந்தச் சூழலில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதால் நீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ளதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தேர்தல் அதிகாரி சமீரன், திமுகவின் புகார்களுக்கு உரிய விளக்கம் தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் வாரியாகப் பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டதாகவும், ஈவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஈவிஎம் இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று தெளிவாக அறிவித்தார். ஆய்வின்போது இயந்திரங்களின் செயல்பாட்டில் எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தத் தவறும் இல்லை என்றும் உறுதிப்படுத்தினார். இந்தச் சரிபார்ப்புப் பணி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி நடைபெற்று வருவதாகவும் அவர் விளக்கினார்.
இதையும் படிங்க: "மியாவ்"...! "மியூட் மோட் காரியவாத பூனை திமுக"..! காவிரி விவகாரத்தில் விளாசிய தவெக..!!