×
 

தொடர் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. இன்று நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி..!!

தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், தங்களது பணியை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 13வது நாளாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ் பணிபுரியும் சுமார் 2,000 தூய்மைப் பணியாளர்கள், ராயபுரம், திரு.வி.க. நகர், மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் கழிவு மேலாண்மையை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் மாநகராட்சியின் முடிவை எதிர்த்து, ஆகஸ்ட் 1 முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்கள் தங்களது வேலையை இழக்கும் அச்சம் மற்றும் ஊதியக் குறைப்பு (23,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகக் குறையும் என அஞ்சுவது) குறித்து கவலை தெரிவிக்கின்றனர். மேலும், திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.

இதையும் படிங்க: இனி பளபளன்னு மாறப்போகுது மெரினா பீச்.. களத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்..!

போராட்டத்தால் சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன, இது பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மழைக்காலத்தில் நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததையும் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று 8-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடி எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த பணி நிரந்தரம் மற்றும் தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என போராட்டக் குழு தெரிவித்தது. இதனால், போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர்கள், பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையொட்டி அமைச்சர்கள், மேயரை சந்தித்து பேசினோம். ஆனால் எங்கள் கோரிக்கை பற்றி பேச முடியாது என அரசு இருந்தால் அதற்கான பதிலை நாங்கள் தருவோம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம், முடிந்தால் எங்களை அப்புறப்படுத்துங்கள். எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், இனி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்தும், எங்களுக்கு எதிர்கால பாதுகாப்பு இல்லை. தனியார்மயம் எங்களை அடிமைகளாக்குகிறது, என வேதனை தெரிவித்தனர். எல்.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவர் பாரதி, "அரசு தொடர்ந்து தவறான வாக்குறுதிகளை அளிக்கிறது. இது மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயல்," எனக் குற்றம்சாட்டினார். 

அரசு மற்றும் காவல்துறையின் நெருக்கடிகளையும் மீறி, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக உறுதியுடன் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.. 12வது நாளாக களத்தில் பகுதி நேர ஆசிரியர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share