யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு! குடும்பத்தை உலுக்கிய சோகம்! போலீசார் விசாரணை!
மரக்காணம் அருகே தாத்தா வீட்டில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் மரக்காணம் அருகே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கரின் மனைவி ஆர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். குடும்ப சூழ்நிலையால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது மகன் தியோ ஆழிசை (13), விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் தங்கி, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சிறுவன் மனவருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாயை சந்திப்பதற்காக அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சில நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர் மீண்டும் நடுக்குப்பம் கிராமத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்! வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும்படி தாத்தா, பாட்டி கூறியதாக தெரிகிறது. பின்னர் வீட்டின் பின்புறம் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், தேடியபோது உயிரிழந்த நிலையில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பள்ளிக்குச் செல்ல விருப்பமின்மை உள்ளிட்ட சில தகவல்கள் கிடைத்ததாக கூறப்பட்டாலும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும், உள்ளூர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விசாரணை முடிவுக்கு பிறகே சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து தெளிவான தகவல் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!