அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் மோதல், பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கு இடையேயான பகைமையின் உச்சமாகக் கருதப்படுகிறது. இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக, ஈரான் ஆப்ரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3 என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதலால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
கடும் போர் மூண்டுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பல்வேறு பணிகளுக்காகச் சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், அரசுகளுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போரில் அதிகம் பாதிக்கப்படுவதும், பலியாவதும் அங்கு வாழும் அப்பாவி மக்கள்தான் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே பாலஸ்தீனத்தின் காசாவிலும், உக்ரைனிலும் நடைபெறும் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சம் மக்கள் பசியிலும் வறுமையிலும் உணவுக்காக அலைகின்ற காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றது. இந்நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையே தற்போது மூண்டுள்ள போரால் மேலும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் துயரமும் நிகழ்ந்தேறுகின்றது.
இதையும் படிங்க: கள் விஷம்; உணவல்ல... சீமானை கைது பண்ணுங்க... கிருஷ்ணசாமி அதிரடி!!
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து குடும்ப வறுமைச்சூழல் காரணமாகப் பொருளாதாரம் தேடி, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்குப் பணிக்குச் சென்றுள்ள தங்கள் உறவினர் நிலையறியாது அவர்களுடைய குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறிப்பாக ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற பல நூறு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அங்கிருந்து தாயகம் திரும்ப போதிய பணமின்றி தவித்து வருவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இத்தனை பெரிய கடற்பரப்பு இருந்தும் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ வழியின்றி கடல்கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று மீன்பிடித்தொழில் செய்ய வேண்டிய அவலநிலை நிலவுவது வரலாற்றுப்பெருந்துயரம் என்றும் தங்கள் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்ள முடியாது கண்ணீர் சிந்தும் மீனவச்சொந்தங்களின் நிலை மிகுந்த பரிதாபகரமானதாகும். ஆகவே, ஈரான் இஸ்ரேல் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டுவந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாடு அரசும் அயலக அமைச்சகத்தின் மூலமும், இந்திய ஒன்றிய அரசின் தூதரகங்கள் மூலமும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமெனவும், பயணச்செலவை மத்திய, மாநில அரசுகளே முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்..! திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!