கள் அறப்போராட்டம்! மிரட்டல் உருட்டல் எங்க கிட்ட வேண்டாம்... எச்சரிக்கும் சீமான்!
கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்து ரமேஷுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் ஜூன் 15ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம்.,கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்ற முழக்கத்துடன், தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்து ரமேஷுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், நாம் தமிழர் கட்சியின் கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக சமூக விரோதிகள் சிலர் அவருடைய வீட்டிற்கு சென்று, மிரட்டி அச்சுறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க: பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!
தமிழர்களின் வாழ்வாதார உரிமையான கள் இறக்கும் உரிமையை மீட்பதற்கு தம்பி முத்து ரமேஷ் அவர்கள் துணை நின்றதை தாங்கிக்கொள்ள முடியாத சிலரின் இத்தகைய அச்சுறுத்தல்கள் கோழைத்தனமானது. அச்சுறுத்தல் செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ்நாடு காவல்துறை இனியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
அறவழியில் அமைதியாக நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத திராவிட ஆட்சியாளர்களின் தூண்டுதல் காரணமாகவே இத்தகைய மிரட்டி அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கின்றேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!