×
 

உதட்டில் தேன் தடவி உணவில் விஷம்.. இது மாற்றாந்தாய் மனப்பான்மை.. சீமான் கொந்தளிப்பு!

தமிழ் மொழிக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கி இருப்பது உதட்டில் தேன் தடவி உலகில் விஷம் கொடுப்பதற்கு சமமான கொடுஞ்செயல் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியை விட சமஸ்கிருதத்திற்கு 22 சதவீதம் அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரது கண்டன பதிவில்,  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் இரு ஆட்சியாண்டுகளான 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து நிதியாண்டுகள் காலத்தில் சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று கூறினார்.

குறிப்பாக தமிழுக்கு ஓர் ஆண்டிற்கு சராசரியாக வெறும் 13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது என்பது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதி என தெரிவித்தார். இன்று நேற்றல்ல பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து வருவதும், அதற்கு தொடர்ச்சியாக தமிழ்நாடு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்வதும் வழமையானது என்றாலும் மோடி அரசு அதனைப் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் பெருங்கொடுமை.

இதையும் படிங்க: மணல் கொள்ளையர்கள் ஆதிக்கம்; யாரும் முடிவுகட்ட தயாராக இல்லை... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை வாழ்விக்க முயல்வதன் மூலம், இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகச்சந்தையாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் அவ்வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

பத்தாயிரம் மக்கள் கூட பேசாத ஒரு மொழியை வளர்த்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது., இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட பல தேசிய இனங்கள் இணைந்து வாழக்கூடிய ஒன்றியம் என்பதை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மக்கள் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு போகிறார்கள் என்பதற்காக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்று ஒவ்வொன்றாக ஒற்றைமயப்படுத்தி திணிக்கின்ற கொடுங்கோன்மை நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை. வடமொழி சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதியை அள்ளிக்கொடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, 50000 ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்மொழிக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிப்பதில்லையே ஏன்., அதிகளவில் வரி பங்களிப்பு செய்யும் தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தரும் தண்டணை இதுவா என கேள்வி எழுப்பினார்.

இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம் என்று இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடியே கூறுகிறார். உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்கிறார். ஆனால் இதுவரை இந்திய அரசு எதுவொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை தந்து அங்கீகாரம் அளித்துள்ளத., இது உதட்டில் தேன் தடவி, உணவில் விசம் தரும் கொடுஞ்செயல் என்றும் இனியேனும் அனைத்து செம்மொழிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்மொழிக்கு கடந்த நிதியாண்டுகளில் குறைத்து வழங்கப்பட்ட நிதியையும் சேர்த்து ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: அண்டை மாநிலங்களில் அணைகட்ட கூட தமிழ்நாட்டு மண்.. கொள்ளையின் கோரமுகம்.. சீமான் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share